Monday, March 17, 2008

428. சுகுணா விலாசம் (அ) சிவப்புச் சாயம் வெளுத்த நரிகள் - BY கி அ அ அனானி

ரொம்ப நாட்களுக்குப் பின் திடீரென்று கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. பதிவொன்றுக்கு எதிர்வினையாக அமைந்துள்ள கி.அ.அ.அ வின் மேட்டரை பதிவு செய்வது அவசியமென்பதால், அவர் எழுதி அனுப்பியதை (முதல் தடவையாக) எடிட் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.

இதை பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! அது போலவே, இப்பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை முன் வைக்கவும் விருப்பமில்லை, தேவையிருப்பதாகவும் நான் எண்ணவில்லை, அதனால் காலணா பிரயோஜனமும் இல்லை ! Over to கி.அ.அ.அனானி.

எ.அ.பாலா

************************************
முன்னதாக ஒரு "பின்" குறிப்பு : பதிவர் சுகுணா திவாகர் தனது வாயால் மட்டும் சிரிப்பதில்லை ( அவரே சொன்னதுதான்) அதனால்தான் அவர் எழுதும் சில பதிவுகள் அவர் எதாலோ சிரிக்கும் போது வெளிப்படும் நறுமண குணநலன்களைக் கொண்டிருக்கிறதோ என்னமோ.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை" "பாப்பார நாய்" என்று வர்ணித்து தனது தரத்தை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் கொண்டுள்ளார் சுகுணா திவாகர்.. இப்படியாக அடுத்தவரை ஜாதிய சாயம் பூசி திட்டும் இவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் " பிள்ளைமார் புத்தியை" காட்டிவிட்டாய் என்று யாரோ சொன்னதற்கு குமுறி குமுறி அழுது விட்டு பதிவுலகத்தில் " இன்றே இப்படம் கடைசி" போர்டெல்லாம் மாட்டி ஒப்பாரி ஓலமிட்டு ஓடினார். ( அப்புறம் எதிர்பார்த்த மாதிரியே இவர்களுக்கே உரித்தான கொள்கை தர்மப்படி புறவாசல் வழியாக மீண்டும் பதிவெழுத வந்த "கொள்கைக் குன்று " என்பது தனிக்கதை :) வலுவான எதிர்ப்பு இருக்காது என்பதற்காக வழக்கப்படி பார்ப்பனர்களை மட்டும் ஜாதி சொல்லித் திட்டும் இந்த மாதிரி " போலி ஜாதி எதிர்ப்பிற்கு " பார்ப்பனீயம், வர்ணம், ஜாதி அடுக்கு என்று என்ன 'லாஜிக்' எழவு வேண்டியிருக்கிறது?

இன்னும் (Director) சங்கர் சாகவில்லையே என்று வருத்தமாம்...அது சரி... எல்லோரும் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? எனக்குக் கூடத்தான் "எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து , அப்பாவி ஏழைகளை ஏமாற்றித் திரியும் போலி கம்யூனிஸ்டுகளின் ஆசன வாயில் சொருக வேண்டும் " என்று ஆசை.நிறைவேறுகிறதா பார்ப்போம்.

எழுத்தாளர் சுஜாதாவின் ஆளுமை மற்றும் தமிழ் எழுத்துலகில் அவரது சாதனைகள் இவைகளைப் பட்டியல் போட்டால் அதில் தேடிப் பிடித்து நொட்டை ,நொள்ளை சொல்லி விவாதிப்பார்களாம்..இப்படி ஒரு பின்னூட்டம் :)ஏற்கனவே சிலர் குறிப்பிட்டுள்ள படி " முன் முடிவுடன்" எழுதுபுவர்களுக்கு பட்டியல் போட்டால் மட்டும் புரிந்து விடவா போகிறது ? முன்னெல்லாம் "ரஷ்யா, சீனா என்று உதாரணம் சொல்லிக் கொண்டு அலைந்தவர்களெல்லாம் அதெல்லாம் காலாவதியாகிப் போன சரக்கானதும் " என்னைத்தவிர எல்லாமே தப்பு " என்ற ஒன் லைனர் சித்தாந்தத்திற்கு மாறி பித்துப் பிடித்து அலையும் அறிவின் நீட்சிதான் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத இப்படிப் பட்ட பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல ?

சுஜாதா ,சுரா இன்னும் பிற எழுத்தாளர்களது மேல் இவர்களுக்கு அப்படி என்ன "காண்டு"? வேறொன்றுமில்லை, இந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் மக்கள் படிக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்து எழுதும் சிவப்பு பிட் நோடிஸை அங்கங்கே தெரு முனையில் நின்று வினியோகம் செய்யும் கட்சித் தோழர்களே கூட படிப்பதில்லை என்ற பொறாமை பொச்சரிப்புதான்.ஒரு வேளை சுஜாதா ,சுரா போன்றவர்களை வைத்து எழுதினால் இந்த நோட்டீஸுகளை மக்கள் ஓரளவேனும் படிக்கக் கூடும் என்பது என் கருத்து.

தான் சொன்னது சரிதான் என்று நிலை நாட்ட பதிவில் மேலும் ராமராஜன் மற்றும் கே எஸ் ரவிகுமார் போன்றோரின் படங்களை வர்க்க ரீதியாக அளவு பார்த்து தரம் பிரித்து " சித்தாந்த செங்கோலை செங்குத்தாக" நிறுத்தியிருக்கும் காமெடியும் இருக்கிறது.படித்து மகிழலாம்.அடடா..இப்படிப் பட்ட ஆதரவு கிடைக்கும் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் ராமராஜன் தன் கலைச் சேவையை தொடர்ந்திருக்கக் கூடும்.

மற்றும் ஒரு விஷயம்... தனது திருமணம் பற்றி பறை சாற்றி முன்னம் எழுதிய சுய தப்பட்டக் கொள்கை விளக்கப்பதிவு. அப்பொழுதே அது பற்றி எழுத எத்தனித்து பின் எப்படியாகினும் அது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் மெளனமாக இருந்த, அதே குறைந்த பட்ச நாகரீகத்தை இப்போதும் பின்பற்றி அது பற்றி பேசாமல் விடுகிறேன்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ,தனி மனித தாக்குதல்களுக்கும் ,கொள்கைகளைத் தாகுவதற்கும் உள்ள வித்தியாசம் நூலிழைதான்.அதனால் அதை புரிந்து கொண்டு, எழுதும் போதும் பேசும் போதும் கவனமாக கைக் கொள்ள வேண்டும், எழுதுவதும் பேசுவதும் சுஜாதாவை பற்றியதாக இருந்தாலும் சரி,ஜெ மோவாக இருந்தாலும் சரி, சக பதிவராக இருந்தாலும் சரி..இல்லை ராமபிரானாகவோ அல்லது அல்லாவாகவோ இருந்தாலும்.

Saturday, March 15, 2008

427. ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து

அன்புக்குரிய சகோதரர் அந்தோணி முத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தமிழ் வலையுலக நண்பர்களிடம் உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் பதிவு இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, பல நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்துள்ளனர். இது வரை சேர்ந்துள்ள தொகையை வைத்து அந்தோணிக்கு ஒரு மடிக்கணினி (அவர் விரும்பிய configuration-இல்) வாங்கித் தர உத்தேசம். அதன் வாயிலாக கணினி சார்ந்த வேலை ஏதாவது செய்து சிறிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்று அந்தோணி உறுதியாக நம்புகிறார். உதவிய / வாழ்த்திய நண்பர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்தோணியின் மற்றொரு முக்கியத் தேவையான (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலியின் விலை கிட்டத்தட்ட 60000 ரூபாய். அதற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது. உங்களால் இயன்றதைச் செய்யலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா ? உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்மடலை பின்னூட்டத்தில் தெரிவித்தால், (பணம் அனுப்பத் தேவையான) என் வங்கிக் கணக்கு விவரங்களை மின்மடலில் அனுப்புகிறேன். நிற்க.

19.3.2008 தேதியிட்ட ஆனந்தவிகடனில், அந்தோணி பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. அவரது அசாத்திய தன்னம்பிக்கை அதில் மிளிர்வதைக் காண முடிகிறது. அந்தோணியின் சமீபத்திய பதிவையும் வாசிக்கவும்.

ஸ்கேன் செய்யப்பட்ட, ஆ.வி.யில் வந்த கட்டுரை கீழே:






என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்தவிகடன்

Monday, March 10, 2008

426. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 5

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

இரங்கல் கூட்டம் குறித்த எனது முந்தைய பதிவுகளை வாசித்து விட்டுத் தொடரவும்.

சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

ஒளிப்பதிவாளர்/இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, வாத்தியாருக்கு மிக நெருங்கினவராக தன்னை அவர் உணர்ந்து கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது.

வாத்தியாரின் கதைகளில் (ஓர் எழுத்தாளனுக்குரிய) சமூக அக்கறையும், மெல்லிய கோபமும் வெளிப்பட்டது என்றும், தனது டிப்ளமா படிப்பின்போது வாத்தியாரின் "வந்தவன்" கதையை பிராஜெக்டுக்காக படமாக்கியது பற்றியும் தங்கர் பேசினார். ஆங்கில இலக்கியத்தை தமிழுக்கு இட்டு வந்ததில் வாத்தியாரின் பங்கு அதிகம் என்றும், அவர் தன்னை ஒரு மகன் போல் பாவித்தார் என்றும் தங்கர் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

தனக்கு கணினி அறிவு இல்லை என்று வாத்தியாரிடம் ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது, அவர், "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் எல்லாம் புத்திசாலியில்ல, தங்கர், இப்டியெல்லாம் யோசிக்காம உங்க வேலையப் பாருங்க, அதில் உங்க திறமையைக் காட்டுங்க!" என்று நம்பிக்கை ஊட்டியதை தங்கர் நினைவு கூர்ந்தார்.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெற்றோரை மையமாக வைத்து தான் எழுதிய கதையை வாத்தியாரிடம் சொன்னபோது, அவர் லேசாக அழுததை (ஒரே ஒரு தடவை!) தான் கண்டதாகவும், தான் போட்டுக் காட்டிய 'பாரதி' படத்தை பார்த்து விட்டு வாத்தியார் பாராட்டியதாகவும், பல எழுத்தாளர்களை உருவாக்கியதில் வாத்தியாரின் பெரும்பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும் தங்கர் பேசினார்.

தனது மனக்கஷ்டங்களின்போது, வாத்தியாரிடம் பேசி தான் ஆறுதல் அடைந்தது பற்றியும், வாத்தியாரின் நெற்றியில் விழும் அந்த கீற்று முடி அவரது மறக்க முடியாத அடையாளம் என்றும் தங்கர் கூறினார். வாத்தியாரின் விமர்சனம் தனது பல கதைகளுக்கு மெருகு கூட்டியது என்றும், கடைசியாக அவரை சந்தித்தபோது, தனது 'தாய் மண்' கதையை அவரிடம் சொன்னது குறித்தும் தங்கர் தெரிவித்தார்.

(அமெரிக்க சென்ற) பிள்ளைகளைப் பிரிந்து வாத்தியாரும், அவரது துணைவியாரும் தனியாக வாழ்ந்த விஷயத்தில், தான் புத்திசாலி என்று கருதும் அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வாத்தியாரிடமே நேரடியாகக் கூறியபோதும் கூட, அவர் ஒரு புன்னகையுடன், "தூரமா இருந்தாக் கூட, பாசம் இருக்கும், தங்கர்!" என்று துளியும் கோபமின்றி பதில் கூறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூட்டுக் குடும்பத்தையும், உறவுகளையும், கல்வி என்ற அசுரன் பிரித்துக் கொண்டிருப்பதாக தனக்கே உரிய பாணியில் சாடி, தங்கர் தன் பேச்சை நிறைவு செய்தார் !!!

எஸ்.ராமகிருஷ்ணன்:
சுஜாதாவை வாசகராகப் பார்த்த ஒரு தரப்பினரும், அவரை ஆதர்சமாகக் கொண்ட ஒரு தரப்பினரும் உள்ளனர். இது போல் ஒரு எழுத்தாளருக்கு அமைவது கடினம். வகுப்பறையில் கற்க முடியாத எதையும் கற்றுத் தரும் ஒரு "வாத்தியாராக" அவர் விளங்கினார்! கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா ஒரு முறை, "நல்ல வாசகர்கள் எழுத்தாளரை சந்திக்கவும் மாட்டார்கள், கடிதம் எழுதவும் மாட்டார்க்ள்" என்று கூறியிருக்கிறார் (எஸ்.ரா இப்படிப் பேசியது, வாய்ப்பிருந்தும் (தேசிகன் வாயிலாக) வாத்தியாரை நேரில் சந்தித்துப் பேச முடியாமல் போன எனக்கு மிக்க ஆறுதலாக இருந்தது!)

வாத்தியார் திறமையை இனம் காண்பதில் வல்லவர் என்பதை, அவர் பல வருடங்களுக்கு முன்பே கமலும், அருந்ததி ராயும் பெரிய அளவில் வருவார்கள் என்று தீர்க்கதரிசனத்துடன் சொன்னதை நினைவு கூர விரும்புகிறேன்.

'பூர்ணம் தியேட்டர்ஸ்' ரமேஷ், தான் பலப்பல விஷயங்களை வாத்தியாரிடம் பகிர்ந்து கொண்டிருப்பினும், அன்னியோன்யமாக நாம் உணர்ந்தவர்களிடம் நாம் பேசியது ஞாபகத்தில் இருப்பதில்லை என்றும், "பாரதி இருந்த வீடு" என்ற தங்கள் நாடகத்தைப் பார்த்து விட்டு வாத்தியார், "என்ன ரமேஷ், உங்க நாடகத்துல எல்லாரும் திகட்ட திகட்ட நல்லவங்களா இருக்காங்களே!" என்று கமெண்ட் அடித்ததையும் குறிப்பிட்டார். வாத்தியாரின் நகரம், வீடு, குதிரை போன்ற கதைகள் மறக்க முடியாதவை என்றும், அவரது 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்' ஒரு வகையில் 'சென்னை 28' திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார்.

ஒரு தடவை வாத்தியாரிடம் சில கவிதைகளை இரண்டு மூன்று முறை வாசித்தாலும் புரிவதில்லை என்று தான் கூறியவுடன், 'புரியலேன்னா விட்ருங்க ரமேஷ்' என்று வாத்தியார் சீரியஸாகச் சொன்னாராம்! 'கவிதை என்பது உனக்கு அப்பாற்பட்டது' என்ற அர்த்தத்தில் தான் வாத்தியார் அப்படிச் சொல்கிறாரோ என்று சந்தேகப்பட்டு ரமேஷ் மறுபடியும், "ஏன் அப்டி சொல்றீங்க ?" என்று விடாப்பிடியாகக் கேட்டபோது வாத்தியார், "எனக்கும் கூட சில கவிதைகள் எத்தனை தடவை வாசிச்சாலும் புரியறதில்ல, ரமேஷ்" என்று ஒரு போடு போட்டதையும் நகைச்சுவையாக ரமேஷ் நினைவு கூர்ந்தார் !!! "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கண்ணதாசனின் வரிகள் சுஜாதாவுக்கு பொருந்தும் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

நண்பர் (ஓவியர்/பதிவர்) தேசிகன்:
வாத்தியாருடனான தன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த தேசிகன், அச்சமயம் தான் சுஜாதா சாரின் படம் ஒன்றை தன் கைப்பட வரைந்து, அதில் கையெழுத்து வாங்க அவரை அணுகியபோது, வாத்தியார், "அட, யார் இது ? என்னைப் போலவே இருக்கே!" என்று தனது usual ஸ்டைலில் கேட்டு விட்டு படத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் ! அவரது பல கதைகளை வாத்தியார் தன்னுடன் டிஸ்கஸ் செய்தது பற்றியும், தனக்கு அவரது official biographer என்ற அந்தஸ்தை வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் புதிய skoda கார் வாங்கியவுடன், அதில் சென்ற முதல் ரவுண்டில் தன்னையும் கூட்டிச் சென்றதையும் தேசிகன் மிக்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து அழைக்க வாத்தியார் வீட்டுக்குச் சென்றபோது, பத்திரிகையைப் பார்த்து விட்டு தேசிகனைப் பார்த்து, "உன் விதியும் அப்படியிருந்தால், நான் என்ன செய்ய முடியும் !" என்று வாத்தியார் கூறவே, அவர் அப்படிச் சொன்னதின் அர்த்தம் புரிய தேசிகனுக்கு சற்று நேரமானதாம் (தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதா :))

தேசிகன் அன்று பேசிய பிற விஷயங்கள் அவரது அப்போலோ தினங்கள் பதிவில் இருக்கின்றன.

திருமலை (சுஜாதா அவர்களின் சகோதரர்):
அவர் தான் எனக்கு ரோல் மாடலாக விளங்கினார். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் "The Complete man" என்பது அவருக்குப் பொருந்தும் ! நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவராக இருந்தார். பல துறைகளிலும் தனது ஆளுமையை/திறமையை நிரூபித்தவர் அவர். அவர் ஒரு Original Thinker ! அவர் நன்றாக வரைவார், கிடார் வாசிப்பார், இசையில் ஞானமுள்ளவர் போன்ற விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்காது. 120 ஆண்டுகளில் சாதிக்கத் தக்க விஷயங்களை என் அண்ணன் ஒரு 70 ஆண்டுகளிலேயே சாதித்து விட்டு போய் விட்டார் !!!! He was a Tall man, not just in terms of height but in stature too ! மற்றவரிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பார். எங்கள் குடும்பத்தில் அவர் தான் இன்ஸ்பிரேஷனாகவும், மேற்கோள் காட்டத் தக்கவராகவும் இருந்தார்.

சுதாங்கன் (மூத்த பத்திரிகையாளர்):
எனது இயற்பெயரும் ரங்கராஜன் தான். ரா.கி.ர தான், சுஜாதாவுக்கு பெயர் சூட்டியது போல எனக்கும் இந்தப் பெயரை சூட்டினார். இந்த இரங்கல் கூட்டத்தை நானும், மதனும் கமலும் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணியிருந்தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும் ! இக்கூட்டத்தை, பார்த்திபனும், வசந்தும், கனிமொழியும் சேர்ந்து நடத்தியது நல்லதாகப் போயிற்று, அவர்களுக்கு என் நன்றிகள்.

ரா.கி.ரங்கராஜனின் மனைவி ஏதோ ஒரு கதையை வாசித்து விட்டு, என்னிடம், 'எப்படி ஒரு மகாத்மா தான் இருக்க முடியுமோ அது போல ஒரு சுஜாதா தான்' என்று மனம் விட்டுப் பாராட்டினார்.

எ.அ.பாலா:
இந்த சமயத்தில் நான் கிளம்பத் தயாராகி விட்டதால், குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டேன். சுதாங்கனுக்குப் பிறகு பேசிய வாத்தியாரின் பெண் உறவினர் ஒருவரும், வாத்தியாரின் டாக்டரும் பேசியதில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அவ்விருவரும் வாசித்த (அஞ்சலிக்) கவிதைகளைக் கேட்க, நல்ல வேளை, வாத்தியார் உயிருடன் இல்லை !!!! இப்படி எழுதுவதற்கு வாத்தியார் என்னை மன்னிக்கவும் !

(இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடைந்தது)

எ.அ.பாலா

Friday, March 07, 2008

425. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

டோ ண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சென்ற பதிவில் கமல் கூறிய ஒரு விஷயத்தை விட்டு விட்டேன். சில வருடங்களுக்கு முன் மருதநாயகம் திரைப்படத்துக்காக தான் அது வரை எழுதியிருந்த திரைக்கதை வசனத்தை சீர் செய்வதற்காக வாத்தியாருக்கு கமல் அனுப்பினாராம். சுஜாதாவும் நிறைய நேரம் செலவழித்து ரெவ்யூ செய்து, சிலபல இடங்களில் திருத்திக்
கொடுத்ததோடு, "திரைக்கதை-வசனம்: கமல், சுஜாதா" என்று கமல் குறிப்பிட்டிருந்ததில், "சுஜாதா"வை அடித்து விட்டு, 'என் பெயரை போடத் தேவையில்லை' என்று நோட் போட்டு கமலுக்கு திருப்பி அனுப்பினாராம் ! அதை நினைவு கூர்ந்த கமல், "மருதநாயகத்துக்கு எழுத இன்னும் நிறைய இருக்கும் சூழலில், சுஜாதா சொன்னது போல, அவர் பெயரைப் போட முடியாமலேயே போய் விட்டது, படம் எடுத்தால் என் பெயரைத் தான் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார்.

கவிப்பேரரசு வைரமுத்து:
சுஜாதா மரபுகளை உடைத்தவர் என்பது இரங்கல் கூட்டத்தில் கரவொலி கூடாது என்பதை மீறி அவரது வாசகர்கள் பல இடங்களில் தங்களை மறந்து கை தட்டுவதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது ! இங்கு கஸ்தூரி ரங்கன் பேசும்போது, சுஜாதாவின் உயிரற்ற முகத்தைப் பார்க்க தான் விரும்பவில்லை என்று சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. சுஜாதா விஷயத்தில், வாழ்வு தராத மலர்ச்சியை மரணம் அவருக்குத் தந்ததாகவே கருதுகிறேன். ஏனெனில், அவரது அமைதியான முகத்தைப் பார்த்தபோது, அவரது கடைசி எண்ணம் மலர்ந்த, எழுச்சி மிக்க எண்ணமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது ! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!)

செத்தபிறகு தான் எழுத்தாளர்களை தமிழர்கள் சிங்காரித்துப் பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, இருக்கும்போதே பாராட்டு விழா எடுக்க வேண்டும்! சுஜாதா வாழ்ந்தபோதே, இதே நாரதகான சபாவில் அவரை நடுநாயகமாக அமர்த்தி, நாமெல்லாம் அவரை பாராட்டிப் பேசியிருந்தால், அந்த பூரிப்பில் அவர் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரோ ?

சுஜாதாவின் எழுத்துகள் ஆழமான கடலுக்கு நிகரானது. அக்கடலில், சில வாசகர்கள் காலை மட்டும் நனைக்கவும் முடியும், சிலர் கட்டுமரம் செலுத்தவும் முடியும், சிலர் கப்பல் செலுத்தவும் முடியும், இன்னும் சிலர் அதில் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும் ! பிரபந்த வாசிப்பு அவருக்கு ஊட்டத்தைக் கொடுத்தது. மேல் நாட்டு இலக்கியதையும் நம் நாட்டு இலக்கியத்தையும் கலந்து அவர் தந்த fusion-ஐ, அதன் தனித்தன்மைக்காக
சுஜாதாயிஸம் என்று கூறுவேன்! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!) ஏதோ ஒரு கதையில், ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பற்றி சுஜாதா, "அவள் புன்னகையை மட்டும் அணிந்திருந்தாள்" என்று எழுதிய வரி என் மனதில் நிற்கிறது!

அவரது "தேவன் வருகை" சிறுகதையை உலகச் சிறுகதைகளில் சிறந்த பத்து கதைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். வாசகரை பலவித சாத்தியங்களை உணர வைக்க வல்லது அக்கதையின் முடிவு! 'வாசகன் பெரியவனா, மரணம் பெரியதா?' என்ற கேள்விக்கு வாசகன் தான் பெரியவன் என்று தான் பதில் கூற முடியும், ஏனெனில் மரணத்துக்குப் பின்னும் ஓர் எழுத்தாளனை (அவனது எழுத்துகளை) வாழ வைப்பது அவனது வாசகன் தானே !!!

சுஜாதாவின் மறைவிலிருந்து நான் கற்றது இவை தான்.
1. எழுத்தாளன் சாகும்வரை எழுதிக் கொண்டே இருக்க முடியும்
2. உடல் உபாதைகள் எழுத்துக்கு எதிரி அல்ல
3. சக எழுத்தாளன் பற்றி புறம் பேசாமை, சக எழுத்தாளனை மதித்தல்.

அடுத்துப் பேசிய பிரகாஷ் சுவாமி, வாத்தியார் அமெரிக்கா சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'All are my relatives' என்ற கட்டுரையை வாசித்த ரோஸன்தால் என்ற மூத்த பத்தரிகையாளர், சுஜாதாவின் ஆங்கிலப் புலமையையும், கட்டுரையின் satire-யையும், நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டி, வாத்தியாரின் நடை Art Buchwald-க்கு (அமெரிக்காவின் நம்பர் ஒன் நகைச்சுவை எழுத்தாளராக பலகாலம் விளங்கியவர்) நிகரானது என்று சிலாகித்ததை நினைவு கூர்ந்தார் !

வாத்தியார் பத்திரிகையாளர்கள் மேல் அன்பும் மரியாதையும் காட்டியவர் என்றும், ஒரு முறை Emmy விருதுகள் வழங்கும் ஜூரியில் ஒருவராக பிரகாஷ் சுவாமியை நியமித்தபோது, வாத்தியாருக்கு தொலைபேசிய அவர், அந்த விருது குறித்தும், விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் வழிவகை பற்றியும் தனது அறியாமையை
வெளிப்படையாக வாத்தியாரிடம் எடுத்துக் கூறினாராம் ! வாத்தியார் எழுதிஅனுப்பிய விளக்க மடல், ஒரு ஜூரியாக தன் கடமையை தான் செவ்வனே செய்வதற்கு மிக்க உறுதுணையாக இருந்ததை பிரகாஷ் குறிப்பிட்டு, சுஜாதாவுக்கு தெரியாத விஷயங்கள் மிகக் குறைவு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் !

பதிவர் எல்லே ராம், சுஜாதாவின் யாகம் என்ற கதையை நாடகமாக ஆக்கி அமெரிக்காவில் அரங்கேற்றியதையும், வாத்தியாருக்கு எழுத்து உத்தியோகமாக இல்லாததால் தான் தமிழ் மேல் அவருக்கிருந்த காதல் மாறாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

சத்யராஜ், விக்ரம் படப்பிடிப்பின்போது வாத்தியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது என்றும், அவரது எழுத்து ஆளுமையையும், வாசிப்பையும் பார்த்து தான் பிரமித்தது பற்றியும் பேசினார். அவரது கடவுள் பற்றிய கட்டுரைகளிலோ அல்லது வாசகர் கடவுள் பற்றி கேள்வி எழுப்பும்போதோ, தான் மிகச் சிறந்த அறிவாளியாகக்
கருதும் சுஜாதா, 'கடவுள் இருக்கிறார்' என்று ஒருபோதும் கூறிவிடக் கூடாதே என்று தான் டென்ஷன் அடைந்தது (!)
குறித்தும் பேசினார் !!!

கனிமொழி:
சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்படாத வாசகரோ, எழுத்தாளரோ இருக்க முடியாது! எது நல்ல சினிமா, எது நல்ல கதை என்று சுஜாதா வாயிலாக வருவதை மதித்த ஒரு வாசக / எழுத்தாள வட்டமிருக்கிறது என்பது தான் உண்மை, சிலர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட !!!

'ஒரு எழுத்தாளரின் வாசகராக நீங்கள் இருந்தால், அவரை நேரில் சந்திக்கக் கூடாது, நீங்கள் உங்களுள் உருவாக்கி வைத்த அவரது பிம்பம் கலைந்து விடக் கூடும்' என்று சுஜாதா சார் அடிக்கடி கூறுவார் என்றும், ஆனால் சுஜாதா விஷயத்தில் தான் நேர் எதிராக உணர்ந்ததாகவும் கனிமொழி உள்ளார்ந்த அன்போடு குறிப்பிட்டார். சுஜாதா சிறிதும் காழ்ப்பற்றவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை ஒரு எழுத்தாளர் சுஜாதாவை தாறுமாறாக விமர்சனம் செய்து வந்த விஷயத்தை கனிமொழி சுஜாதவிடம் சுட்டிக்காட்டியபோது, வாத்தியார் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதிய அருமையான ஹைக்கூ கவிதைகள் பற்றிக் கூறி பேச்சை மாற்றியதை குறிப்பிட்டார்!) என்றும், ஒரு Celebrity எழுத்தாளர் என்ற நினைப்பே இல்லாமல் இயல்பாகப் பழகியது பற்றியும், தான் அவரை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மிகச் சிறந்த மனிதராக எண்ணுவதாகவும் கனிமொழி தெரிவித்து தன் பேச்சை சுருக்கமாக நிறைவு செய்தார்.

(அடுத்த பதிவில் இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடையும்)

எ.அ.பாலா

Thursday, March 06, 2008

424. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

அடுத்துப் பேசியவர் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.நடராஜன் அவர்கள். AIR-க்காக 1970-இல் ராஜாஜி நகரில் சுஜாதாவை 20 நிமிடங்கள் பேட்டி கண்டதை நினைவு கூர்ந்து, வாத்தியார் அதை ஒரு மாடல் பேட்டி என்று பாராட்டியதையும் குறிப்பிட்டார். திருமதி சுஜாதாவை meticulous என்று பாராட்டிவிட்டு, பெங்களூரில் வாத்தியாருடன் வாரம் ஒரு திரைப்படம் பார்த்த நாட்கள் பற்றியும், ஒரு நாடக விழாவுக்காக வாத்தியாரின் "என்றாவது ஒரு நாள்" கதையை நாடகமாக்கியது குறித்தும், வாத்தியாரின் சங்கீத ஞானத்தை சிலாகித்தும் நடராஜன் பேசினார்.

ஜெ.காவும், சுஜாதாவும் தானும் ஓர் இரவு முழுதும் கென்னத் லாட்ஜில் ஒரு அறையில் இலக்கிய அரட்டை அடித்த நிகழ்வு பற்றி நடராஜனும் நகைச்சுவையாகப் பேசினார். ஜெ.கா (சாவி வாங்கித் தரும் சாம்பார் சாதத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியபடி!) வாத்தியாரையும் நடராஜனையும் வற்புறுத்தி இழுத்துச் சென்று, அவர் மட்டும் இரவு முழுதும் தண்ணியடித்தபடி, தங்களை பட்டினி போட்டதை நினைவு கூர்ந்த நடராஜன், அதிகாலையில் ஜெயகாந்தனைப் பார்த்து, "எவ்வளவு நேரம் சிப்ஸ் சாப்பிட்டு பொழுது போக்குவது?" என்று தாங்க முடியாமல் கேட்க, பின்னர் மூவரும் இம்பாலா ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட மலரும் நினைவுகளை சுழல விட்டார் :)

வாத்தியார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றும், தான் அவரது எழுத்துகளுக்கு தீவிர விசிறி என்றும், அதே சமயம் வாத்தியாரின் பழகும் தன்மைக்கும், நற்குணங்களுக்கும் அடிமை என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி தன் உரையை நிறைவு செய்தார்!

(இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிய) பேராசிரியர் ஞானசம்பந்தன் தான் பேச்சாளர் ஆனதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், வாத்தியார் எழுத்தில் கடைபிடித்த வேகத்தையும், சுருக்கத்தையும் தான் தனது பேச்சில் கடைபிடிப்பதாகவும் தன் பேச்சைத் தொடங்கினார். ஞானசம்பந்தன் ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் சென்று எது பற்றியோ நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தபோது, சுஜாதா தனது மனைவியை அழைத்து, "இவர் எவ்வளவு அருமையா பேசறார், பாரேன்!" என்று கூறியபோது, திருமதி சுஜாதாவோ தான் பேராசிரியரை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் தனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை என்று புன்னகைத்தாராம் :) இந்த பாராட்டால் தான் மிக்க மகிழ்ச்சியுற்றதாகவும், வாத்தியார் கள்ளம் கபடு இல்லா உள்ளம் கொண்டவர் என்பதற்கு இது சான்று என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார் ! ஞானசம்பந்தனின் பேச்சை கமல் மிகவும் ரசிப்பதாக ஒரு மேடைக் குறிப்பு வரவே, பேராசிரியர் தன் பேச்சைத் தொடர்ந்தார் !

வாத்தியாரின், "சசி காத்திருக்கிறாள்" என்ற சிறுகதையை, தான் வாசித்ததில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதுவதாகவும், வாத்தியார் ஆழமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை வாத்தியாருடன் மதுரை அழகர் கோயிலுக்கு ஞானசம்பந்தன் சென்றபோது, மதுரைக்காரரான பேராசிரியருக்கேத் தெரியாத விஷயமான, 'ஆண்டாள் பள்ளிப்படுத்தப்பட்ட இடம் அழகர் கோயில்' என்பதை சுஜாதா சொன்னபோது தான் ஆச்சரியப்பட்டதை குறிப்பிட்டார்!) என்றும் கூறினார்.

வாத்தியாரின் மர்ம நாவலான நிர்வாண நகரத்தை சிலாகித்துப் பேசிய ஞானசம்பந்தன், ஒரு கதையில் வசந்த் கணேஷைப் பார்த்து கூறும், "அவ நடையப் பாருங்க பாஸ், புதுமைப்பித்தன் நடை தோத்துரும்" என்று வாத்தியார் 'போகிற போக்கில்' எழுதியிருப்பதையும், 'திமலா' என்ற அறிவியல் புனைவுக் கதையை ஒரு பாசுரத்துடன் வாத்தியார் நிறைவு செய்த நேர்த்தியையும் சுட்டிக் காட்டினார் ! வாத்தியார் போல அறிவியல்/தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழுக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு தன் இரங்கல் உரையை நிறைவு செய்தார்.

வாத்தியார் தனது 60 ஆண்டு கால நண்பர் என்று நெகிழ்ச்சியுடன் தன் பேச்சை ஆரம்பித்த கணையாழியின் கஸ்தூரி ரங்கன், அவருடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய பால்ய பருவத்தை நினைவு கூர்ந்தார்! தான் சுஜாதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப் போகாததற்குக் காரணம், தன் நினைவில் அவரது மலர்ந்த முகமே என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்ற கஸ்தூரி ரங்கன், கணையாழி நடத்தி வந்த 30 ஆண்டு காலத்தில், இலக்கிய ரீதியாக தாங்கள் எவ்வளவோ பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

எழுத்துக் கடமை (முக்கியமாக, ஆன்மிகம் சார்ந்த) முடிவுறாத நிலையிலேயே, சுஜாதா காலமாகி விட்டதாக தான் உணர்வதாக க.ர. கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் "யுகமாயினி"யில் கடைசி 16 பக்கங்களை "கணையாழி பக்கங்கள்" என்று ஒதுக்கி, அதில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.ர மற்றும் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் எழுத இருந்ததாக் குறிப்பிட்ட க.ர, ஓர் இதழுக்கு மட்டுமே சுஜாதா எழுத முடிந்தது (இது தான் வாத்தியார் கடைசியாக எழுதியது!) துரதிருஷ்டமே என்று கூறினார். வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு, "Best of Sujatha" என்ற தலைப்பில் யுகமாயினியில் இ.ரா.முருகன் எழுதுவார் என்று க.ர. கூறி தன் பேச்சை நிறைவு செய்தார்.

கமலஹாசன் தான் எழுதியதை எல்லாம் வாசிக்க / விமர்சிக்க வைத்து வாத்தியாரை படுத்தியிருப்பதாகவும், இனிமேல் தான் எழுதுவதை யாரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார். வாத்தியாரின் (மொழிபெயர்க்கப்பட்ட) சில கதைகளை மலையாள வாசகர்கள் சிலாகித்துப் பேசும்போது (தமிழில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதற்காக) தான் கோபம் அடைந்ததாகவும், வாத்தியாரின் இரங்கல் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வந்து மரியாதை செலுத்துவது வாசகத் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது என்றும் கூறிய கமல், இரங்கல் கூட்டத்துக்கு வந்த வாசகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வாத்தியாரிடம் (அவரது விரிந்த வாசிப்பினால்) மேல்நாட்டுத் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வாசிப்பில் பெற்றதை, இந்தச் சூழலுக்கேற்ப தமிழாக்கம் செய்ததால் தான் அவர் எழுத்து பெருவெற்றி அடைந்தது என்றும், ஒரு காலத்தில் வாத்தியாரைப் பார்ப்பதற்காகவே தான் பலமுறை பெங்களூருக்கு சென்றிருப்பதாகவும் கமல் கூறினார். முதன்முதலில் வாத்தியாரை சந்திப்பதற்கு முன்னால், அவர் வீட்டுக்கு தொலைபேசிய கமல், "Can I speak to Sujatha?" என்று வினவ, ஒரு பெண்குரல், "Speaking, நீங்க யார் பேசறது ?" என்றவுடன் ராங் நம்பர் என்று இருமுறை கமல் ·போனை வைத்து விட்டாராம் ! மறுபடியும் நிதானமாக டயல் செய்து, "Can I speak to writer Sujatha?" என்று கேட்க, திருமதி சுஜாதா, தொலைபேசியை கணவரிடம் தந்தாராம் :)

கமல் தனது வெளிப்படையான ஸ்டைலில், ஒரு கதையில் வாத்தியாரின் "ஏராளமான மார்புகள்" என்ற சொற்பிரயோகத்தைக் கண்டு தான் அசந்து விட்டதாகக் கூறினார் !!!

வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, ராமகிருஷ்ணன், தேசிகன், சுதாங்கன் ஆகியோர் பேசியதையும் எழுதினால், இப்பதிவு நீண்டு விடும் அபாயம் இருப்பதால், அடுத்த பதிவில் இரங்கல் கூட்ட நிகழ்வின் தொகுப்பை நிறைவு செய்கிறேன். தயவு செய்து காத்திருக்கவும் !

Tuesday, March 04, 2008

423. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சாரு நிவேதிதா தனக்கு 2 நாட்களாக தூக்கமில்லை என்றும், பதற்றமாக இருப்பதாகவும் சொல்லி தன் பேச்சைத் தொடங்கினார். தனது இரண்டு ஆசான்கள் சுஜாதா மற்றும் ஜெ.கா என்றும், பாரதம், உபனிஷத், இன்னபிற விஷயங்கள் ஜெ.கா விடமிருந்து கற்றதாகவும், நவீன விஷயங்களை வாத்தியாரிடம் கற்றதாகவும் உணர்ச்சிகரமாகக் கூறினார். அதோடு, திருமதி சுஜாதா வாத்தியாரை போஷித்ததால் தான், அவர் வீட்டுக் கவலைகள் இன்றி எழுத்தில் வெற்றி பெற முடிந்தது என்றும், வாத்தியாரை அப்பாவாக நினைத்து அவர் பிரிவினால் வாடும் மனுஷ்யபுத்ரன், வசந்த் மற்றும் கனிமொழிக்கு தனது இரங்கல்களை தெரிவிக்க விரும்புவதாகவும் சொன்னார். மேலும், நடிப்புக்கு என்று பார்த்தால், சிவாஜிக்குப் பிறகு கமல், அவருக்குப் பிறகு சில நல்ல இளம் நடிகர்கள் இருப்பது போல, வாத்தியாரின் பாணியிலும், ரேஞ்சிலும் எழுத அவருக்குப் பிறகு யாருமே இல்லை என்பது தான் யதார்த்தம் என்று சாரு புகழாரம் சூட்டினார்.

சிவாஜி என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, வாத்தியார் எழுதிய முதல் கதையை மீட்டுத் தருபவருக்கு, பாதி சாம்ராஜ்ஜியத்தை தந்து, மகளையும் மணமுடித்துக் கொடுப்பதாக சுஜாதா 'சாவி'யில் ஓர் அறிவிப்பு விட்டதை சாரு நினைவு கூர்ந்தார். அவ்வறிவிப்பை வாசித்து தான் வாத்தியாரின் மருமகனாக ஆகும் வாய்ப்பு உள்ளதை எண்ணி குதூகலம் கொண்டு, சாவி வார ஏடுக்கு, தன்னிடம் வாத்தியாரின் அந்த 'முதல்' கதை பத்திரமாக இருப்பதாகவும், திருமணத்தை எங்கு எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டும் சாரு ஒரு கடிதம் எழுதினாராம் :)

அந்த 'முதல்' கதையின் காப்பியை வாங்கித் தரும்படி சுஜாதா தன்னை நச்சரிப்பதாக சாருவுக்கு கடிதம் எழுதிய சாவி, வாத்தியாருக்கு மகள் கிடையாது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். சாருவும் பதிலுக்கு தானும் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டதை சாரு நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார். வாத்தியார் Roald Dahl போல எழுதுவதாக வாத்தியாரிடமே தான் கூறியதையும், வாத்தியாருக்கு (ஒரு நல்ல படைப்பாளிக்கு மிக அவசியமான) வாசிப்பின் மீது இருந்த passion பற்றியும், வாத்தியாரின் தொடர்ந்த கற்றலினால் அவர் எழுத்துக்கு என்றுமே வயதாகாதது பற்றியும், பாரதிக்குப் பிறகு வாத்தியார் ஒரு Cultural Force ஆக விளங்கியது குறித்தும் சாரு தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அரங்க மேடையில், வாத்தியாரின் நீண்ட விரல்கள் பேனாவோடு உறவாடும், enlarage செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான புகைப்படத்தை சுட்டிக் காட்டிப் பேசிய சிவசங்கரி, சுஜாதா இந்த வித்தியாசமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றும், தமிழை எளிமைப்படுத்தியவர் பாரதி, அடுக்களைப் பெண்களையும் வாசிக்க வைத்தவர் கல்கி, தொழிலாளர்களையும் வாசிக்கச் செய்தவர் சி.பா.ஆ என்ற வரிசையில் இளைய தலைமுறையை மொத்தமாக ஈர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் சுஜாதா என்றும் கூறினார்.

வாத்தியார் தனது 40 வருட நண்பர் என்று நினைவு கூர்ந்த சிவசங்கரி, வாத்தியார் visual writing என்பதை தமிழுக்குக் கொண்டு வந்ததையும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், இலக்கியம், கேள்வி-பதில் என்று அனைத்திலும் முத்திரை பதித்ததையும், சாவி அவர்கள் வாத்தியாருக்கும், வேணுகோபாலனுக்கும் தனக்கும், 'நட்சத்திர அந்தஸ்து' பெற்றுத் தந்ததையும், வாத்தியார் தன் எழுத்துக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததையும், வாத்தியார் தமிழ் எழுத்துலகில் ஒரு trend setter ஆக பல காலம் விளங்கியதையும் குறிப்பிட்டுப் பேசினார். 30 வருடங்களுக்கு முன் வாத்தியார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்!

மதன், சுஜாதா கட்டிய கண்ணுக்குத் தெரியாத மேம்பாலத்தில் பயணித்த எழுத்தாளர்களில் தானும் ஒருவன் என்றும், வாத்தியார் மீடியாவில் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாலும் உடனடியாக ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றியது பற்றியும், அவரது மகத்தான அறிவால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் என்றும், வாத்தியார் (குறைந்த) ஊதியத்தைப் பற்றிக் கவலைப்படாததால் தான் சினிமாவில் பரிமளிக்க முடிந்தது என்றும், திறமை மிக்கவர்களை சினிமாவுக்கு வரவழைக்க எழுத்தாளர்களின் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்றும்,வாத்தியார் தமிழ்நாட்டை விடுத்து வேறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்து இருப்பார் என்றும், சில controversial விஷயங்களை தொட்டுப் பேசினார் !

Pentamedia சந்திரசேகர், James Hadley Chase, Harodl Robbins வாசித்த தலைமுறையை நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி போன்ற நாவல்களால் தமிழுக்குத் திருப்பிய பெருமை வாத்தியாரையே சாரும் என்றும், தனது நிறுவனம் தயாரித்த பாண்டவாஸ், அலிபாபவும் 40 திருடர்களும், புத்தா, கல்லிவர் டிராவல்ஸ் போன்ற அமிமேஷன் படங்களுக்கு அவரது திரைக்கதையும், எளிய ஆங்கில வசனமும் வலு சேர்த்தன என்றும், வாத்தியார் ஒரு நிஜமான 'multi media' (வானொலி, டிவி, சினிமா, பத்திரிகை ..) மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். Pentamedia அலுவலகத்தில் வாத்தியார் பயன்படுத்திய அறையை கடந்த 2 வருடங்களாக யாரும் பயன்படுத்தவில்லை என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

ஓவியர் ஜெயராஜ் ஜாலியாகப் பேசினார். வாத்தியார் எழுத்தில் சுவாரசியமும், spontaneity-யும் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, "எதிர்வாடையில் ஒரு ஜெயராஜ் போய்க் கொண்டிருந்தது" என்று சுஜாதா எழுதியதை அவர் சுட்டியவுடன் அரங்கில் கைதட்டல் ! வாசகரின் அறிவுத்திறனை மதித்தும், வட்டார வழக்கை கூர்மையாக அவதானித்தும் வாத்தியார் எழுதினார் என்றும் ஜெ குறிப்பிட்டார். வாத்தியார் நகைச்சுவையை காஷ¤வலாகவும், subtle ஆகவும் வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றாலும், அவரை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்றெல்லாம் உளர தான் விரும்பவில்லை என்றும், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் வாத்தியாருக்கு நிகர் அவரே என்றும் ஜெ கூறினார் !

ஒரு முறை சாவி நடத்திய வாசகர் விழா ஒன்றில், சுஜாதாவை இளைஞர்கள் மொய்த்துக் கொண்டு, தங்கள் சட்டையைக் கழற்றி மார்பில் கையெழுத்து இடுமாறு அன்புத் தொல்லை செய்தபோது, வாத்தியார் கண்களோ அங்குமிங்கும் அலை பாய்ந்தன. 'என்ன தேடறீங்க?' என்று ஜெ கேட்க, 'வாசகிகள் யாரையும் காணோமே!' என்றாராம் வாத்தியார் :)

இன்னொரு சமயம், மாரீஸ் ஓட்டலில் மேடையில் பேசுவதற்கு முன்னால் தான் நெர்வஸாக இருந்தபோது வாத்தியாரிடம் டிப்ஸ் கேட்டதையும், அதற்கு சுஜாதா மெல்ல, 'எனக்கும் உதறலாத் தான் இருக்கு!' என்றதையும் நினைவு கூர்ந்த ஜெ, வாத்தியாருக்கே உதறல் என்ற சங்கதி தனக்கு தெம்பைக் கொடுத்ததால், மேடையில் அன்று சிறப்பாக தான் பேச முடிந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அன்று, பேச்சை முடித்துக் கொண்டு ஜெ மேடையை விட்டு இறங்கியவுடன், வாத்தியார், "என்னய்யா, உதறி முடிச்சாச்சா?" என்று கலாய்த்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று ஜெயராஜ் கூறினார் :)

வாத்தியார் இல்லை என்ற விஷயத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் ஜெ தன் உரையை முடித்துக் கொண்டார் !

மற்ற பிரபலங்கள் பேசியவை மூன்றாம் (இறுதி) பாகத்தில் வரும் !

எ.அ.பாலா

Monday, March 03, 2008

422. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

வகுப்பறைக்கு அப்பாற்பட்டு நான் கற்றுக் கொண்ட பலவற்றுக்கும், சில சமயங்களில் தூண்டுகோலாகவும் பல சமயங்களில் ஆசானாகவும் நான் நினைக்கும் சுஜாதா சாருக்கு சென்னை நாரத கான சபாவில் நேற்று இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிகன் மூலம் தெரிய வந்தது, சென்றிருந்தேன். சுஜாதா மட்டுமே தமிழ் எழுத்துலகின் (வாசகர்களுக்கும், பல எழுத்தாளர்களுக்கும்!) உண்மையான ஜனரஞ்சக வாத்தியார் என்றால் அது மிகையாகாது !

நான் சென்றபோது பாதி அரங்கமே நிறைந்திருந்தது, ஆனால் மெல்ல மெல்ல ஒரு 90% நிறைந்து விட்டது. வாத்தியாரின் வாசகர்கள் ஆகவும் நண்பர்கள் ஆகவும் விளங்கிய பிரபலங்கள் பலர் உரையாற்றினர். அவர்கள் பேசியதிலிருந்து, சுஜாதா என்பவர் பெரிய எழுத்தாளர்/சிந்தனாவாதி/அறிவுஜீவி என்பதை தாண்டி, ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பது புரிந்தது !

முதலில், விஜய் டிவியில் வாத்தியார் முன்பொரு முறை அளித்த பேட்டி (சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற நிகழ்ச்சிக்கு) ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், PG Wodehouse தனது 93வது வயதில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தபோதே இறந்து போன நிகழ்வைக் கூறி, அதே போல மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாகச் சொன்னது கொஞ்சம் நெகிழ்ச்சியைத் தந்தது! அப்படியே மரித்தும் போனார் தானே !!!

அதன் பின், வாத்தியாருக்குப் பிடித்த திவ்யபிரபந்தப் பாசுரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
பாடியவர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் புதல்வி ஸ்ரீரஞ்சனி
இயற்றியவர்: குலசேகர ஆழ்வார்
பாசுரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே


பொருத்தமான பாசுரம் என்று தான் தோன்றுகிறது. குலசேகர மன்னன் வேண்டியது போல, வாத்தியார், வைகுந்தத்தில் படியாய் மாறி அவ்வரங்கனை நேரில் கண்குளிர தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்!

இரங்கல் நிகழ்ச்சியை சுவைபட தொகுத்தவர் நடிகர் பார்த்திபன். நடுநடுவே அவர் கூறிய சின்னச்சின்ன விஷயங்களில் இரண்டு மனதைத் தொட்டது.

1. பல எழுத்தாளர்களை வாசகராகக் கொண்ட சுஜாதா, தன்னைப் போன்ற வாசகனை எழுத்தாளனாக்கியதை நினைவு கூர்ந்த்தார்.
2. சுஜாதா ஒரு முறை அவர் துணைவியாரிடம், அவருக்காக தான் பெரிய அளவில் எதுவும் சேர்த்து வைத்து விட்டுப் போகாததாகக் கூறியதாகவும், அதற்கு 'உண்மையான' சுஜாதா, "நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் என் பேரில் தானே எழுதியிருக்கிறீர்கள், அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு!" என்றாராம் !

பிரபலங்கள் பேசியதில் முக்கியமானவற்றை மட்டும் பகிர்கிறேன்.

மனுஷ்யபுத்ரன் தன் உடலின் ஒரு பகுதியை இழந்தது போல உணர்வதாகவும், சுஜாதா வாசகர் சந்திப்பு நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதையும், வருடாவருடம் வாத்தியார் நினைவாக சுஜாதா விருது வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். சுஜாதா தனக்கு புது வாழ்வளித்தவர் என்றும் கூறினார்.

ரா.கி.ர, சுஜாதா என்ற சிறந்த நண்பரின் இழப்பு தன்னை மிகவும் அழ வைத்து விட்டதாகவும், சுஜாதா பத்திரிகை உலக அவசரங்களுக்கு மதிப்பு கொடுத்த விதத்திற்காக அவரை Editor's Delight என்று சிலாகித்தும், பாரதி போல, கல்கி போல இன்னொரு சுஜாதா வருவதற்கும் சாத்தியமில்லை என்றும் அஞ்சலி செலுத்தினார்.

வாத்தியாரின் மைத்துனியும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வரும் ஆன நிர்மலா பிரசாத், தங்கள் கல்லூரியின் ஏகலைவர்கள் (மாணவிகள்) ஒரு துரோணாச்சாரியரை இழந்து வாடுவதையும், வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தமிழ் துணைப்பாட நூலாக சேர்க்கப்பட்டதும் தமிழ் வகுப்புகளில் 100% அட்டென்டன்ஸ் ஆனதையும், உரைகள்/சந்திப்புகள் வாயிலாக தமிழ் ஜர்னலிஸம் மாணவிகளுக்கு (கல்லூரியின் நிஜமான வாத்தியார்களுக்கு மேலாக!) அற்புதமான அறிவுரைகள் / ஆலோசனைகள் வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் தனது பாரதி திரைப்பட அறிமுக உரை மூலம், தமிழர் அல்லா மாணவிகளுக்கும் பாரதி மேல் ஈடுபாடு வரச் செய்ததையும் எடுத்துக் கூறினார்.

கிரேசி மோகன் பேசியது சற்றே உருக்கமாக இருந்தது. பெங்களூரில் தனது நாடகங்களுக்கு வாத்தியார் வந்திருந்து, குழந்தை போல குலுங்கிக் குலுங்கி சிரித்து, கண்ணில் நீர் வர ரசித்ததை மோகனும் மற்றவரும் திரை மறைவிலிருந்து பார்த்து பரவசப்பட்டதையும், நாடகம் முடிந்தவுடன் குறைநிறைகளை (லாயர் கணேஷ் போல) வாத்தியார் அழகாக அலசியதையும் கிரேசி நினைவு கூர்ந்தார். மேலும், வாத்தியார் நாடகத்துறைக்கு செய்த சேவை மகத்தானது என்றும், வாத்தியார் (திவ்ய பிரபந்தம் மேல் அவருக்கு இருந்த காதலால்) தற்சமயம் வைகுண்டத்தில் பெருமாள் பக்கத்தில் இருப்பதை விட ஆழ்வார்கள் அருகே இருப்பதையே விரும்புவார் என்றும் சுவைபடக் கூறினார்.

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன், மனைவி பெயரில் எழுதியவர்கள் மேல் தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றும், சுஜாதா அதை மாற்றியதாகவும், வாத்தியார் தனது கதைகளில் பெண்களை 26,36 என்று நம்பர்களாக ஆக்கியதையும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்! இறந்தவுடன் சுஜாதா எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்று ஜெ.கா சொன்னதை ஏற்க முடியவில்லை. வாழும்போதே அவர் (சில வலைப்பதிவர்களை தவிர்த்து!) பெரும்பாலானவருக்கு வேண்டப்பட்டவராகவே இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை. நவீனமான விஷயங்களையும், அறிவியல் / தொழில்நுட்பச் சிந்தனையையும் தமிழுக்குக் கொண்டு வந்ததில் சுஜாதா பெரும்பங்காற்றியுள்ளார் என்று ஜெ.கா சிலாகித்துக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லாட்ஜ் ரூமில் சுஜாதாவுடன் ஓர் இரவு முழுதும் விழித்திருந்து தமிழ் இலக்கியம் பற்றி விவாதித்தையும் நினைவு கூர்ந்தார்.

ஆ.வியின் அசோகன், வாத்தியாரின் தாக்கமே இல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவு என்றும், அவரைப் போல எழுதினாலும் அல்லது அவரைப் போல எழுதாவிட்டாலும், இரண்டுமே பெருமைப்படக் கூடிய விஷயங்கள் தான் என்றும் கூறினார் !

இந்திரா பார்த்தசாரதி, வாத்தியாரின் 'நைலான் கயிறு' ஒரு முன்னோடி என்றும், தான் நாடகம் எழுதுவதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், தனது 'மழை' என்ற நாடகத்தைப் பார்த்து விட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தால்(!) நன்றாக இருக்கும் என்று சுஜாதா சொன்னதையும், 1965 காலகட்டத்தில், தானும், சுஜாதாவும், 'கணையாழி' கஸ்தூரி ரங்கனும் தில்லியில், இலக்கியம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும் நாஸ்டால்ஜிக்காகக் கூறினார்.

நடிகர் சிவகுமார், வாத்தியாரின் 'மேகத்தை துரத்தினவன்', நைலான் கயிறு, வைரங்கள், மறுபடியும் கணேஷ், கொலையுதிர் காலம் போன்ற கதைகளை வாசித்தும், அவரது டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, அன்புள்ள அப்பா போன்ற நாடகங்களை பார்த்தும் தான் 'மிரண்டு' போனதை வாத்தியாரிடமே போன் போட்டுச் சொன்னதைக் குறிப்பிட்டார். வாத்தியார் தங்கள் வீட்டுக்கு தங்க வரும்போது, தன்னிடம் ஒரு லுங்கி வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னோடு உணவருந்தி இயல்பாக இருந்த நாட்களையும் சிவகுமார் நினைவு கூர்ந்ததோடு, வாத்தியார் சகமனிதர்களை பலவீனங்களோடு ஏற்றுக் கொண்ட Down to Earth மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். சுஜாதா, கமலை அறிவு வழியாகப் பேசுபவர் என்றும், தன்னை மனசு வழியாகப் பேசுபவர் என்றும் ஒரு முறை சொன்னதை சிவகுமார் குறிப்பிட்டார்!

அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி அவர்கள் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது, ஒரு சமயம் வெண்பா போட்டி அறிவித்ததையும், அதற்கு வாத்தியார் "வேண்டாம் வரதட்சிணை" என்ற தலைப்பில் நகைச்சுவை வெண்பா எழுதியதையும், அதை கிருஷ்ணனின் தந்தை கட்டம் கட்டி பதிப்பித்ததையும் குறிப்பிட்டார் !

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


சுஜாதா ஒரு தசாவதானி என்றும், அவருக்கு எல்லா வித தமிழ் தட்டச்சும் சரளமாக வரும் என்றும் கூறினார். ஒரு சமயம் ஒரு வாசகர், "1330 குறள்கள் இருப்பதால், அதை திருக்குறள்கள் என்று தானே குறிப்பிட வேண்டும், ஏன் திருக்குறள் என்று ஒருமையில் இருக்க வேண்டும் ?" என்று கேட்ட கேள்விக்கு, வாத்தியார் spontaneous ஆக "திருக்குறள் 'கள்'ளை அனுமதிப்பதில்லை" என்று பதில் கூறியதையும், திருமதி சுஜாதாவின் சீரிய கவனிப்பால் தான் ஒரு 10 வருடங்கள் அவர் அதிகமாக உயிர் வாழ்ந்ததாகவும் கிருஷ்ணன் கூறினார்.

சாரு நிவேதிதா, சிவசங்கரி, மதன், ஓவியர் ஜெயராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தன், கஸ்தூரி ரங்கன், கமல், வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, நண்பர் தேசிகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கற் கூட்டத்தில் பேசியதை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

எ.அ.பாலா

Saturday, March 01, 2008

421. சுஜாதா அஞ்சலிப் பதிவுகள் - பட்டியல்

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட பலப்பல பதிவுகளை / கட்டுரைகளை, வாசிப்பதற்கு வசதியாக அவ்விடுகைகளின் சுட்டிகளை இங்கே (நான்அறிந்தவரை) தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவை குறித்து பின்னூட்டத்தில்தெரிவித்தால், அவற்றையும் இப்பதிவில் சேர்த்து விடுகிறேன். நன்றி.

எ.அ.பாலா


http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html
(மனதை நெகிழ வைத்த (என்னைப் போன்ற) ஒரு சாதாரண வாசகனின் அஞ்சலி!)

A tribute by Raji

http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html
http://desikan.com/blogcms/?item=208
http://desikan.com/blogcms/?item=207
http://desikan.com/blogcms/?item=206
http://desikan.com/blogcms/?item=205

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/422-1.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/423-2.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/424-3.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/425-4.html

http://balakumaranpesukirar.blogspot.com/2008/03/blog-post.html
http://naalavathukann.blogspot.com/2008/03/blog-post.html
http://tamiloviam.com/unicode/02280803.asp
http://karaiyoram.blogspot.com/2008/03/blog-post.html

http://penathal.blogspot.com/2008/02/blog-post.html
http://pitchaipathiram.blogspot.com/2008/02/blog-post_27.html
http://domesticatedonion.net/tamil/?p=741
http://cyrilalex.com/?p=387
http://imohandoss.blogspot.com/2008/02/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/
http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_28.html

http://icarusprakash.wordpress.com/2008/02/27/thank-you-sir-for-everything/
http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_29.html
http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html
http://valai.blogspirit.com/archive/2008/02/27/sujatha.html
http://andaiayal.blogspot.com/2008/02/blog-post.html

http://anamikatalks.blogspot.com/2008/02/author-sujatha-is-no-more.html
http://mogadalai.wordpress.com/2008/02/27/sujatha-rip/
http://www.chakkarapani.com/graffiti/?p=316
http://balajiulagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://chennai.metblogs.com/archives/2008/02/writer_sujatha_is_dead.phtml

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/38810
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/12866

http://naachiyaar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.html

http://santhipu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://vasanthamravi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://surveysan.blogspot.com/2008/02/blog-post_1876.html
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_5951.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_7099.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html
http://puthupunal.blogspot.com/2008/02/blog-post.html
http://cdjm.blogspot.com/2008/02/blog-post.html

http://vadakarai.blogspot.com/2008/02/blog-post.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_28.html
http://usthamizhan.blogspot.com/2008/02/blog-post.html
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_28.html

http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_9834.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_27.html
http://feeds.vicky.in/~r/dhandora/~3/242335441/
http://osaichella.blogspot.com/2008/02/blog-post_100.html

http://ravisrinivas.blogspot.com/2008/02/blog-post_29.html
http://thoughtsintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://pettagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html

http://ilackia.blogspot.com/2008/03/blog-post.html
http://bashakavithaigal.wordpress.com/2008/02/28/சுவாரஸ்யம்-போய்விட்டதா-ச/
http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_28.html
http://oagaisblog.blogspot.com/
http://tvrk.blogspot.com/

http://pradeep.blogspot.com/2008/03/blog-post.html
http://losangelesram.blogspot.com/2008/02/1.html
http://sangappalagai.blogspot.com/2008/03/44.html
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_28.html

http://umakathir.blogspot.com/2008/02/blog-post_27.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post_27.html
http://harimakesh.blogspot.com/2008/02/189.html
http://koculan.blogspot.com/2008/02/blog-post_28.html

http://sandanamullai.blogspot.com/2008/02/blog-post.html
http://poothoorigai.blogspot.com/2008/02/blog-post_27.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html
http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_8509.html
http://varmah.blogspot.com/2008/03/blog-post_02.html
http://valpaiyan.blogspot.com/2008/02/blog-post_27.html
http://mithra11.blogspot.com/2008/03/blog-post.html
http://raasaa.blogspot.com/2008/02/progressive-compromises.html

http://mei-pungkaadan.blogspot.com/2008/02/blog-post_3482.html
http://palipedam.blogspot.com/2008/03/blog-post.html
http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kaalapayani.blogspot.com/2008/02/2.html
http://thiruvadiyan.blogspot.com/2008/02/blog-post_28.html
http://pksivakumar.blogspot.com/2008/02/blog-post_27.html

http://www.tamilstar.com/news/publish/article_5663.shtml

Friday, February 29, 2008

420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்

ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போது அவரே போய் விட்டார் :( 

இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது.  கண்ணாடிப் பெட்டியில் இருந்தவர் உறங்குவது போலத் தான் தோன்றியது.  அருகில் இருந்த தேசிகன் சோகத்தில் இருண்டு போய் காணப்பட்டார்.  கடந்த பல வருடங்களாக சுஜாதா தேசிகனை தனது சொந்த மகன் போலத் தான் பாவித்து வந்ததை நான் அறிவேன்.  தேசிகனும் சுஜாதா மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, தேவையான சமயங்களில் அவர் கூட இருந்து பல உதவிகள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான மனுஷ்யபுத்திரனும் சோகமே வடிவாக காட்சியளித்தார். அவரிடமும்,  தேசிகனிடமும் என் இரங்கலைத் தெரிவித்தேன் !

நான் அங்கு செல்வதற்கு சற்று முன்பு தான் கலைஞரும், கமலும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றிருந்தனர்.  மதனையும், இயக்குனர் வசந்த்தையும், கனிமொழியையும் (சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவரும் கூட) பார்த்தேன். நான் பார்த்தவரை, பாலு மகேந்திரா, சுஹாசினி, மணிரத்னம், பிரமிட் நடராஜன், சிவகுமார், அவரது மகன் கார்த்திக், பாலகுமாரன், அனுராதா ரமணன், சாரு நிவேதிதா, வைகோ, திருமாவளவன் என்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தனர். வந்தவர்களை வைத்துப் பார்த்தால், தமிழ் எழுத்தாளராக, சுஜாதா ஏதோ சாதித்து இருப்பார் போலத் தான் தெரிகிறது !!!  பதிவர்களில் ரஜினி ராம்கி, டோண்டு, அதியமான், உண்மைத்தமிழன், இரா.முருகன், ஹரன் பிரசன்னா என்று சிலரை சந்திக்க முடிந்தது. 

எனக்கும் சுஜாதாவுக்குமான உறவு, எழுத்தாளர்-வாசகன் என்பதோடு முடிந்து விடுகிறது.  அவர் எழுத்துக்களோடு மட்டுமே எனக்கு பரிச்சியம் உண்டு. அவர் எழுதியதில் ஒரு 90% வாசித்திருப்பேன்.  என்னவோ, அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை (சிறுகதை, நாவல், நாடகம், சயின்ஸ் பிக்ஷன், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்தவை, கட்டுரைகள்) வேறு யாரும் ஏற்படுத்தவில்லை, அவர் 'இலக்கியம்' என்று பெரிய அளவில் எதுவும் படைத்திராவிட்டாலும்!  அவர் படைப்புகளில் பலவற்றை
இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், 24 வருடங்களுக்கு முன்.  நான் கோயமுத்தூர் GCTயில் பொறியியல் மாணவனாக இருந்த காலகட்டத்தில், எங்கள் மின்னணுவியல் அசோசியேஷன் அழைப்பின் பேரில் வந்திருந்தார்.  அன்றைய கல்லூரி தின விழாவில் extempore-ஆக ஒரு 30 நிமிடங்கள், ஆங்கிலக் கலப்பின்றி அவர் தமிழில் உரையாற்றியதை மறக்கவே முடியாது !!!  அது போலவே, ஒரே ஒரு முறை (2 மாதங்களுக்கு முன்) அவருடன் அம்பலம் சாட்டில் உரையாடியிருக்கிறேன் ! சாட்டுக்குள் சற்று தாமதமாக நுழைந்தும்,  தேசிகனின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டதால், சாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒரு பத்து மணித்துளிகள் நீட்டிக்க முடிந்தது.  நரேந்திர மோடி, கிரிக்கெட், வலைப்பதிவுகள் என்று சில விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு, அவரது பாணியில் பதில் கூறினார்.

அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகமில்லை.  அக்கதைகளில் காணப்படும் அவரது தேர்ந்த (அவருக்கு மட்டுமே வசப்படும்) நடையும், மெலிதாக இழையோடும் நகைச்சுவையும், சில இடங்களில் உருக்கும் சோகமும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டி நம்மை அசை போட வைக்கும் உத்தியும், அவரது எழுத்து ஆளுமையை பறைசாற்றுபவை!  அவரது தூண்டில்
கதைகளில் காணப்படும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் A twist in the tale வகை துள்ளல் நடையும், இறுதியில் வரும் எதிர்பார்க்க முடியாத சடார் முடிவும் வாசிப்பவரை கட்டிப் போட்டு விடும்.  கணேஷ் வசந்த் பங்கு பெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில், துப்பு துலக்க அவர்கள் இருவரும் உரையாடும் கட்டங்களையும், மேற்கொள்ளும் சாகசங்களையும் சுஜாதாவின் நுண்ணிய அறிவியல் சார் சிந்தனை ஓட்டத்தின்
வெளிப்பாடாக நோக்கலாம்.  'நிர்வாண நகரம்' நாவலில் வரும் (புத்தி கூர்மை மிக்க) நாயகனாகவே நான் சுஜாதாவைப் பார்க்கிறேன் ! 

அவருக்கு இரங்கல்/அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தமிழ் வலைப்பதிவுலகில் வெளி வந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இடுகைகள் சுஜாதா ஏற்படுத்திய வாசக தாக்கத்துக்கு சான்று!  அவற்றில் குறிப்பிடத்தக்கவை கனடா வெங்கட், பிரகாஷ், அருள்செல்வன் கந்தசுவாமி, பெனாத்தல் சுரேஷ், காசி, டோ ண்டு, விக்கி (இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு சட்டென்று வர மறுக்கிறது!) எழுதியவை.  ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறது.  பொதுவாக, ஒருவர் இருக்கும்போதே அவரைப் பாராட்டி நாம் எழுதுவதே இல்லை என்று கூறலாம், விமர்சனம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே எழுதுகிறோமோ என்று தோன்றுகிறது :(

வாசகர்கள் வாழ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாழ
கணேஷ் வசந்த் மதுமிதா வாழ
ஆத்மா ஜினோ அனிதா வாழ
நீர் 'கற்றதும் பெற்றதும்' வாழ

நீர் ஏனய்யா நூறாண்டு வாழாமல் சென்று விட்டீர் ?

சுஜாதா சார், "பிரிவோம் சந்திப்போம்" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.

Thursday, February 28, 2008

A COLOSSUS by the name of SUJATHA!

மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!
)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//


யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//


அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: ஆனந்த விகடன்

419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(

தேசிகனிடம் பேசினேன். மிக்க சோகத்தில் இருக்கிறார் என்பது குரலிலேயே தெரிந்தது. கடந்த 2 நாட்களாக நினைவு இன்றி தான் சுஜாதா இருந்ததாக அவர் கூறினார். சுஜாதாவுக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்திலும் பிரச்சினைகள் !

அவரது 70-வது பிறந்தநாளின் போது "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வைணவ பாரம்பரியத்தின்படி வாழ்த்தி நான் எழுதிய பதிவு இங்கே

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, February 12, 2008

418. பெங்களூரை சீரழிக்கும் தகவல் தொழில்நுட்பம்!

உலக அரங்கில் பெயர் பெற்ற, திடநிலை மற்றும் பொருள் வேதியியல் விஞ்ஞானியும் (solid state and materials chemist), பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரும் ஆன C.N.R. ராவ் பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாடி  அவுட்லுக் இதழில் கூறியுள்ள கருத்துகளை (இயன்றவரை) மொழி பெயர்த்து தந்துள்ளேன்:

எளிமையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர அனுமதித்த பெருமைக்குரிய பெங்களூர் இப்போது இல்லை! ஒரு காலத்தில், வித்யார்த்தி பவனில் ஒரு மசால் தோசையும், காபியும் உங்களைச் சந்தோஷமாக வைத்திருந்தது.  தற்போதுள்ள பெங்களூர் பெருமளவு சீரழிந்து காணப்படுகிறது.

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு முன், பெங்களூரில் கவிதையும், இசையும் வாழ்ந்தன. சமீப காலங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பெங்களூரில் பிரதானமாக இருப்பவை அழுகலும், மாசுச்சூழலும், குப்பையும் மட்டுமே!  இக்குப்பையில், தகவல் தொழில் நுட்பத்தின் அறிவுஜீவிக் குப்பையும் அடக்கம்!

பெங்களூர், வெகு காலமாகவே, அறிவார்ந்த நகரமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை 'கார்டன் சிட்டி' என்று அழைத்தாலும், இந்தியாவின் பல நகரங்களைக் காட்டிலும், அறிவியலில் பெருமைக்குரிய இடத்தை பெங்களூர் பெற்றிருந்தது.  இப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை. பெங்களூரை தகவல் தொழில்நுட்ப நகர் என்றே அழைக்கின்றனர்!  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில், வேலை வாய்ப்புகள் பெருகியதை வைத்து, இது நல்லது என்றே நானும் கருதினேன்!

இத்தனை வருடங்களில், தகவல் தொழில்நுட்பம் என்பது 'மால்'களில் புழங்கும் ஓர் உயர்மத்திய வகுப்பின் ஜனத்தொகையை பெருக்கியுள்ளது.  இதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும், இதனால் பெங்களூரின் உண்மையான அறிவுஜீவித்தனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சிந்திக்கத் தக்கது. 

கெட்டிக்கார மாணவர்கள் 20 வயது ஆவதற்கு முன்னமே, IT குறித்து சிந்திக்கத் தொடங்குவது, அதனால் சுலபமாக பணம் ஈட்ட முடியும் என்பதால் மட்டுமே!  இதனால், பல அறிவாளிகள் தங்கள் அறிவுத் திறத்திற்குக் கீழான பணியை மேற்கொள்கிறார்கள்.  அவர்களும் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் போன்றவர்கள் தான்!

இத்தகைய சூழல் இந்தியாவுக்கு ஏற்றதா ? அனைத்துத் துறைகளிலும் - திறமையான கவிஞர்கள், நல்ல பொருளாதார நிபுணர்கள், வரலாறு வல்லுனர்கள், சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று - தேவையான அளவில் திறமை மிக்கவர்கள் இருத்தல் அவசியம்.  தகவல் தொழில்நுட்பத்தில் செழிக்கும் இந்தியாவில், கணினிவியலில் வருடத்திற்கு 25 பேரே டாக்டர் பட்டம் பெறுவது பெரிய முரண் இல்லையா?

தகவல் தொழில்நுட்பத் துறை முதலாளிகள் ஆரம்பத்திலேயே தங்கள் பணி மையங்களை ராமநகரம் (பெங்களூரிலிருந்து 40 கிமீ) போன்ற டவுன்களில் திட்டமிட்டு இருக்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப சாட்டிலைட் நகரங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.  அதை விடுத்து, அவர்கள் அனைவரும் பெங்களூருக்கு உள்ளேயே நிலத்தை வளைத்துப் போடவே விரும்பினர்!  அது போலவே, அவர்களுக்கு நிலம் கிட்டியும், அது போதவில்லை என்று புகார் வேறு கூறுகின்றனர்!

சாலைகள் சரியில்லை என்று ஒரு புகார், ஆனால் எதற்காக அவர்களுக்கு வேண்டி இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரியவைல்லை,  அவர்களது சமூகப் பொறுப்பை அவர்கள் சரியாக நிறைவேற்றாதபோது !  இவ்வளவு பணம் பண்ணும் இந்த IT முதலாளிகள், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் அல்லது ஹார்வர்ட் போன்ற ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்திருந்தால், அவர்களால் ஏற்பட்ட மற்ற பிரச்சினைகளுக்கு ஈடு செய்வது போல அமைந்திருக்கும்!

IT துறையில் பணி புரிபவர்கள் கொழிப்பதால், எனக்கு என்ன பயன், நானும் விப்ரோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் வேலை செய்யாத பட்சத்தில் ?  நாம் (மக்கள்) அவர்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறோம், பதிலுக்கு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம் !

நமது சமூகம் உருவாக்கியிருக்கும் (IT துறையைச் சார்ந்த) ரோல் மாடல்களும், முன்மாதிரிகளும், பெங்களூரின் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், நமது வாழ்வியல் மதீப்பீடுகளையும் (values) சேர்த்தே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் !!!!!  நம் மக்கள், உழைப்புடன் கூடிய மேதமைக்கு (scholarship) மரியாதை தந்த காலம் போய்விட்டது.  பணமும், வணிகமும் நம்மை ஆக்ரமித்து விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தால் நமது அடிப்படை மதிப்பீடுகளுக்கு ஆபத்து தொடருமானால், பெங்களூரையும் எரிக்க வேண்டும், தகவல் தொழில்நுட்பத்தையும் எரிக்க வேண்டும் !!!

நன்றி: அவுட்லுக்

பி.கு: நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்தாலும், CNR ராவ் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான கருத்துக்களோடு எனக்கு ஒப்புதலே என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் !

எ.அ.பாலா

Tuesday, January 29, 2008

417. கடவுளும் காலணியும்

டிசம்பரின் ஒரு மாலைப் பொழுதில், ஒரு பத்து வயதுச் சிறுவன்,  செருப்பறியா பாதங்கள் கடுங்குளிரில் நடுங்க, ஒரு காலணிக் கடையை கண்ணாடி சன்னல் வழியாக வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.  அவ்வழியே வந்த நடுத்தர வயது பெண்ணொருத்தி அச்சிறுவனிடம், "என்ன, ஏதோ பலமான யோசனையில் உள்ளது போல் தெரிகிறதே!" என்றவுடன், அவன், "எனக்கு ஒரு ஜோடிக் காலணிகளை வாங்கித் தருமாறு கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்!" என்று கூறினான்.

சிறுவனின் கையைப் பிடித்து, அக்காலணிக் கடைக்குள் அழைத்துச் சென்ற அப்பெண், கடைக்காரரிடம் அச்சிறுவனுக்கு டஜன் காலுறைகள் எடுத்து வருமாறு கூறியதோடு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், டவலும் தரும்படி கேட்டுக் கொண்டார்.  தனது கையுறைகளை நீக்கி விட்டு, குனிந்து சிறுவனின் சிறிய பாதங்களை தண்ணீரால் சுத்தம் செய்து துடைத்து விட்டார் அப்பெண்மணி.

அதற்குள், கடைக்காரர் சிறுவனுக்கான காலுறைகளுடன் வந்து விட்டார். அவற்றில் ஒரு ஜோடியை அப்பெண்மணி சிறுவனுக்கு அணிவித்து விட்டு, அவனுக்கு விலை உயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகளையும் வாங்கிக் கொடுத்தார். மற்ற காலுறைகளையும் ஒரு பையில் இட்டு சிறுவனிடம் தந்து விட்டு, அவன் தலையைத் தடவி, "நிச்சயம் இப்போது உனக்கு சற்று சௌகரியமாக இருக்க வேண்டும், இல்லையா?" என்று கூறினார்.

சிறுவனுக்கு விடை கொடுத்த சமயத்தில், மிக்க பிரமிப்பில் இருந்த அவன், அப்பெண்மணியின் கைகளைப் பற்றி, கண்களில் கண்ணீருடன் அவரை ஏறிட்டு நோக்கிக் கேட்டான், "நீங்கள் கடவுளின் மனைவியா ?"

எ.அ.பாலா

Monday, January 21, 2008

416. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும் - பாகம் 2 - இலவச கொத்தனாருக்காக

நான் எழுதிய முந்தைய பதிவுக்கு பதிலடி தரும் வகையில் நம்ம கொத்ஸ் (இலவச.கொத்தனார்) Politically correct-ஆ ஒரு பதிவு எழுதியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்:)
"// .... //" இருப்பவை இ.கொ வின் கருத்துகள்.

//
அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?
//
செலக்டர்களை "முட்டாள்கள்" அப்டின்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லலாமா என்று கேட்கிறார். உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை. BCCIயின் கிரிக்கெட் தேர்வுக் குழு ஆதி காலத்திலிருந்து, கிரிக்கெட் அறிவும் அனுபவமும் இல்லாத, சார்புடைய முட்டாள்கள் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்களைச் சேர்ப்பதுவும், சீனியர்களை பந்தாடுவதும் பல முறை நடந்துள்ளதை கிரிக்கெட்டை ஃபாலோ பண்ணுபவர்கள் அறிவார்கள் !!!

//
ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.
//
நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாள் போட்டி, 20-20 அல்ல !!!! நீங்கள் கூறும் நால்வரில், இருவர் இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மீதி இருவருக்கு பதில், சீனியர்கள் வேண்டும் ! எப்படியும் கார்த்திக் passenger-ஆகத் தானே இருக்கப்போகிறார்.

//
திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?
//
இது தெரிந்தது தானே, ஆனால் இதற்கு பதிலாக ஒன்று கேட்க முடியும் !! ஃபீல்டிங் மட்டுமே வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கிறதா என்ன ? ஒரு பேட்ஸ்மன் முட்டை அடித்து விட்டு, 20-25 ரன்களை தடுத்து விட்டால் போதுமா ? டிராவிட்டுக்கு fitness இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

//அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது.
//
இந்த concept-ஏ தவறு என்பது என் கருத்து. 2011-க்கு இப்போதிலிருந்தே தயார் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் !!! 20-20 வெற்றியை வைத்து இந்த இளைஞர்களை demi gods ஆக்க முயல வேண்டாம் ;-) அவர்களிடம் சரக்கு இருக்கிறது. ஆனால், போக வேண்டிய தூரமும் அதிகமே !!! 2011-இல், சச்சின், டிராவிட், யுவராஜ், தோனி ஆகிய நால்வருமே தேவை !

//சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும்.
//
உலகக்கோப்பை வெளியேற்றம் அவமானம் என்று தான் கூறினேனே ஒழிய, சீனியர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றெல்லாம் கூக்குரல் நான் இடவில்லை. மேலும், ஒரு முறை கங்குலி, டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடபோது (அதோடு, கொஞ்சம் அரசியல் செய்தபோது!), அவரை நீக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறேன். பெங்காலி பாபுக்கள் போல "கங்குலி தெய்வம்" என்ற கருத்து உடையவன் நானல்லன்... நான் கூறுவதெல்லாம், தகுதிக்கும் ஃபார்முக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே !!!!!!!

நிற்க, மேலும் சில கருத்துகள்:

1. சீனியர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டதற்கு, நவ்ஜோத் சித்துவும், கபிலும், ஜடேஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சித்து, கங்குலி நீக்கப்பட்டது குறித்து ஒரு திறந்த விவாதத்தில் தன்னுடன் மோதுமாறு "கர்னல்" வெங்சர்க்காருக்கு NDTV-யில் அழைப்பு விடுத்துள்ளார் !!! விவாதத்தில் தான் தோற்றால், இனி NDTV-யில் தோன்ற மாட்டேன் என்றும், வெங்க்சர்க்கார் தோற்றால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2. தோனி கேட்ட (20-20 உலகக்கோப்பையை ஜெயித்த) டீமையே அவருக்கு வழங்க வேண்டும் என்ற பட்சத்தில், செலக்டர்களின் பங்கு என்ன ???? முன்னர், டிராவிட் விஷயத்தில் ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை ??? தோனி என்ன, அதற்குள் அவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டாரா ? தோனியும் அரசியல் செய்வது போல் தெரிவதால், இனி உருப்பட்டா மாதிரி தான் :(

3. தற்போதுள்ள தேர்வுக்குழுவில், டெஸ்ட் / ஒரு நாள் அனுபவம் உள்ளவர்கள் வெங்க்சார்க்கரும், ராஜுவும் மட்டுமே. மற்ற மூவரும், காலணாவுக்குத் தேறாதவர் என்பது உலகமறிந்த விஷயம் தானே ! மேலும், தாதாவை நீக்குவது பற்றி BCCI பெருந்தலைகளுக்கு தெரியாது என்பதையோ, அவர்களின் tacit approval இன்றி இது நடந்திருக்கும் என்பதையோ ஒருவர் நம்பினால், அவரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் :)

இறுதியாக, நமது தேர்வாளர்கள் முட்டாள்கள் மட்டும் அல்ல, திமிர் பிடித்த, தலைக்கனம் கொண்ட கோமாளிகள் கூட !!!

எ.அ.பாலா

Sunday, January 20, 2008

415. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்

அடப்பாவிகளா, அம்பயர்களும், ரெ·ப்ரியும், நிறவெறி பிடித்த ICCயும் தான் இந்திய அணிக்கு எதிராக உள்ளன என்றால், நம்ம BCCI தேர்வாளர் குழுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டது போல இன்று டிராவிட்டும், கங்குலியும், முரளி கார்த்திக்கும், லஷ்மணும், நடைபெறவுள்ள (இந்திய-ஆஸ்திரேலிய-ஸ்ரீலங்கா) முக்கோண ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுவும், நேற்று பெர்த்தில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணியினரை demoralize செய்யும் விதத்தில், நான்காவது டெஸ்ட் நடைபெறவுள்ள சூழலில் இதைச் செய்திருப்பதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது !!!!

Horses for Courses என்ற வகையில் லஷ்மணும், தற்போதைய form-இன் அடிப்படையில் கங்குலியும் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்! வெங்க்சார்க்கருக்கு கங்குலி மேல் என்ன கடுப்போ ? BCCI-இல் கோலோச்சும் "மும்பை மாபியா" எப்போதும் போல தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மொகீந்தர் அமர்நாத் "Selectors are a bunch of Jokers" என்று கூறியதை இன்னும் இவர்கள் நிரூபித்த வண்ணம் உள்ளனர்!

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாலும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது, அணியில், இளைஞர்களும், அனுபவமிக்கவர்களும் சம அளவில் இருத்தல் அவசியம். ஒரு நாள் பந்தயம் 20-20 விளையாட்டு அல்ல !!! என்னளவில், சாவ்லா, சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார் ஆகியோரை காத்திருக்க வைப்பதில் தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பாவம், தினேஷ் கார்த்திக்குக்கு இருக்கும் அதிர்ஷ்டம் முரளி கார்த்திக்குக்கு இல்லை :( அது போலவே, யுவராஜ் form-இல் இல்லாத நிலையில், டிராவிட், லஷ்மண், கங்குலி என்று (தற்போது சிறப்பாக ஆடி வரும்) அனுபமிக்க மூவரையும் ஒரு சேர நீக்கியிருப்பது தெளிவான கிறுக்குத்தனம் !!! தேர்வாளர்கள் இதற்கு முன்னமே ஒரு மடத்தனம் செய்ததை குறிப்பிட வேண்டும். சகீர் கானுக்கு காயம் ஏற்பட்டபோது அவருக்கு பதிலாக, VRV சிங் என்ற காலணாவுக்கு உபயோகம் இல்லாத ஒரு பந்து வீச்சாளரை ஆஸ்திரேலியாவுக்கு (ஊர் சுற்றிப் பார்க்க!) அனுப்பியது தான் அது !!!

நடக்கவிருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா மோசமாக விளையாடி தோற்கும் பட்சத்தில், இந்த தேர்வாளர்கள் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவார்களா ???? தேர்வாளர்களுக்கு BCCI சம்பளம் என்று எதுவும் வழங்குவதில்லை என்றாலும், அவர்களின் சுகமான பிரயாணத்திற்கும், வசதியான ஹோட்டல்களில் தங்குவதற்கும், மூக்கு பிடிக்க தின்பதற்கும், குடித்து கும்மாளம் அடிப்பதற்கும், தினப்படிக்கும் BCCI தண்டம் அழுது கொண்டு தான் இருக்கிறது என்பது நிஜம்!!! நமது தேர்வாளர்களே, "Go India Go" என்றில்லாமல், "Go Aussie Go" என்றிருப்பது தான் விந்தையிலும் விந்தை :(

என்று தான், சார்பில்லாத, டெஸ்ட் / ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட, விஷய ஞானமுள்ள மனிதர்கள் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்களோ, புரியவில்லை :(

எ.அ.பாலா

414. வைணவ திவ்யதேசம் 8 - திருக்கபிஸ்தலம்

Photo Sharing and Video Hosting at Photobucket
இவ்வைணவ திவ்யதேசம் பாபனாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில், கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத் தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது. இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. கபிஸ்தலத்தோடு, திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவையும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Photo Sharing and Video Hosting at Photobucket
கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவ மூர்த்திக்கு ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற திருநாமம். உத்சவரின் திருநாமம் கஜேந்திர வரதன். தாயார் ரமாமணிவல்லி மற்றும் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தமும் விமானமும் முறையே கஜேந்திர புஷ்கரிணி, ககநாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. கபிலத் தீர்த்தம் என்ற புண்ணிய நீர்நிலையும் இங்கு உள்ளது. ஆஞ்சநேயரும் பெருமாளை இங்கு வழிபட்டார் என்பதற்கு ஒரு பழங்கதை உண்டு.

தலபுராணம்:
ஒரு சமயம், மகாவிஷ்ணுவின் பரம பக்தனான இந்திரத்யும்னன், துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு, கஜேந்திரன் என்ற யானை உருவில் பெருமாளுக்கு மலர்ச்சேவை செய்து வந்தான். அவனைப் போலவே, குஹ¤ என்ற கந்தர்வன் அகத்திய முனியின் கோபத்துக்கு ஆளாகி, ஒரு முதலையாக உருமாறி கபிஸ்தலத்தில் உள்ள தடாகத்தில் வசித்து வந்தான்.

Photo Sharing and Video Hosting at Photobucket
ஒரு முறை, கஜேந்திரன் தடாகத்தில் தாமரை மலர்களை பறித்துக் கொண்டிருந்தபோது, அவன் காலை அந்த முதலைப் பற்றியது. எவ்வளவு முயன்றும் விடுபடமுடியாமல், கஜேந்திரன் பெருமாளைத் துதித்து பெருங்குரலெடுத்து தன்னைக் காப்பாற்றுமாறு அழைக்க, கருடவாஹன ரூபராய் தோன்றிய பரந்தாமன் திருச்சக்ரத்தை வீசி முதலையை அழித்ததார். கஜேந்திரனின் சேவையையும், பக்தியையும் மெச்சி அவனுக்கு பெருமாள் மோட்சம் அருளினார். அதனாலேயே, இங்கு கிடந்தருளியுள்ள எம்பெருமான் 'பாப விமோசன' குணம் உடையவராக கருதப்படுகிறார்.

இத்திருத்தலத்தை திருமழிசையாழ்வார் ஒரு திருப்பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

2431@
கூற்றமும் சாரா* கொடுவினையும் சாரா* தீ
மாற்றமும்* சாரா வகையறிந்தேன்*
ஆற்றங்கரை கிடக்கும்* கண்ணன் கடல்கிடக்கும்*
மாயன் உரைக்கிடக்கும்* உள்ளத்து எனக்கு.


காவிரி ஆற்றங்கரையான கபிஸ்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் கண்ணனும், பாற்கடலில் யோக நித்திரையில் உள்ள மாயவனும் ஆன எம்பெருமான் சதா சர்வ காலமும் என் சிந்தையில் குடியிருப்பதால், என்னை மரண பயமும், கொடும்பாவங்களும், தீயனவைகளும் அண்டாமல் இருப்பதற்கும், அந்த மாயப்பிரானை பற்றுவதற்கும் ஆன வழிவகையை நான் கண்டு கொண்டேன் !

Photo Sharing and Video Hosting at Photobucket
ஒற்றைப் பிரகாரம் உடைய சிறிய கோயிலிது. மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தை படத்தில் காணலாம். இத்திருக்கோயிலில் ஆண்டாளுக்கும் சந்தான கிருஷ்ணனுக்கும், யோக நரஸிம்மருக்கும், சுதர்சன ஆழ்வாருக்கும், கருடனுக்கும், பிற ஆழ்வார்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. பங்குனி மாதத்தில் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர, வைகுண்ட ஏகாதசியும், ஸ்ரீராமநவமியும், அக்ஷய திருதியையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 19, 2008

413. அந்தோணிக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

சமூக உதவி சார்ந்த விதயங்களில் மிகுந்த அக்கறை உடைய சிங்கை அன்பு அந்தோணி என்ற இளைஞருக்கு உதவுவது குறித்து அனுப்பிய மின்மடலில், ஏற்கனவே மதுமிதா தனது நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவின் சுட்டியை அளித்து, அந்தோணிக்கு நாம் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைத்தார்.
**************************
From Madhumithaa's posting:
இசைதான் வாழ்க்கை என்று இசையைக் கற்ற அக்குழந்தை பாதியில் படிப்பை நிறுத்திய சோகத்திற்கு காரணம், வாழ்ந்தே ஆகவேண்டுமே என்ற தீராவிருப்பே.

பி.ஏ இசை இரண்டாம் வருடம் முடித்துவிட்டு மூன்றாம் வருடம் செல்ல இயலவில்லை.மூன்று வருட திரையிசை முயற்சிக்குப் பிறகு இசையை விட்டு விட்டு, கணினியில் ஏதேனும் வேலை செய்ய வேண்டும். யாரையும் சார்ந்திருக்காது தன் உழைப்பில் வாழ வேண்டும் என்பது இவரின் விருப்பம்.

இதில் என்ன விஷயம் இருக்கிறதென்று பார்க்கிறீர்களா?இதுதான் விஷயமே. மனம் தளராத ஊக்கம் குறையாத இக்குழந்தை வசிப்பது ரெட்ஹில்ஸில்.

அப்போது அக்குழந்தைக்கு வயது 11. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறி ஒரு கிணற்றில் விழ நேர்ந்த விபத்தில், கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. குழந்தையைப் பார்ப்பது போன்றே இவரைக் கவனிக்க வேண்டும். கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

பரிதாபத்தையோ, அனுதாபத்தையோ இவர் எதிர்பார்க்கவில்லை. அன்பையும் நட்பையும் போற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புக் குழந்தை. உழைப்பின் மதிப்பறிந்த இக்குழந்தையை வாழ்த்துவோம். உரியதை அளிப்போம்.
********************************************

இம்முயற்சிக்கு அன்பு தன் பங்காக ரூ 10000 அனுப்பியும் உள்ளார். அவர் தந்த ஊக்கமும், எனது முந்தைய சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவும் தான், இந்த பதிவின் வாயிலாக இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கத் தூண்டுதலாக அமைந்தது.

புதிய பதிவர்களுக்கு ஒரு தகவல்: இது வரை கௌசல்யா என்ற ஏழை மருத்துவ மாணவியின் படிப்புக்கும், இன்னும் சில கல்வி சார்ந்த விதயங்களுக்கும் உங்கள் ஆதரவோடு, உதவி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், நான்கு பெண் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கும், அலெக்ஸாண்டர் என்ற ஆதரவற்ற முதியவரின் கண் மருத்துவ சிகிச்சைக்கும் நீங்கள் செய்த பொருளுதவியின் வாயிலாக, அக்குழந்தைகளும், முதியவரும் குணமடைந்து நலமாக உள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

பார்க்க: நண்பர்களுடன் சமூக சேவை

********************************
அந்தோணி தன்னைப் பற்றி:

பல முறை இந்த வாழ்க்கை என்னை சந்தோஷப் படுத்தியிருக்கிறது.
அதற்குச் சமமாக துக்கப்படுத்தியும் இருக்கிறது. (நாணயத்தின் இரு பக்கங்கள்...?)

ஒரு உண்மயை இங்கே விளம்பியாகவேண்டியது கட்டாயம்.

என்னதான் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும்... துயரமும் துன்பமும் என்னை வாட்டும்போது பலமுறை (எண்ணிக்கை நினைவில்லை) நானும், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.

கொடூரமான மனவேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.
மனதின் வலி தாங்காமல்....
இரவுகளில் வெடித்து அழுதிருக்கிறேன்.

"இறைவா! இந்த நொடியே என்னை எடுத்துக்கொள்," என்று
புழுவாய்த் துடித்துக் கெஞ்சியிருக்கிறேன்.

என் தந்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.

"சின்னதொரே...! ராஜா...!," "நாங்க (பெற்றோர்) இருக்கும்போதே கடவுள் உன்னை எடுத்துக்கணும்னு வேண்டிக்கடா...!"

அவர் சொல்வது எந்த அளவு சத்தியம், நிதர்சனம், என்பதை அவர் இருக்கும்போதே எனக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.

ஊனமுற்ற தன் மகனுக்கு, உணவிடுவதைத் தவிர, உடலளவிலோ, வேறு வசதிகளோ... எதுவுமே செய்ய இயலாத ஒரு வயதான தகப்பனாக...
அவர்...

தான் அழுவதைக்கூட மறைக்கப் பார்ப்பார். (வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். உடல் குலுங்கும். கண்களில் மெளனமாய் வான் மழை வழிந்தோடும்.)

28-6-2007 விதி என் வாழ்வின் சூரியனை விழுங்கிய நாள்.

என் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

இன்னமும் அந்த அதிர்ச்சியில்... இழப்பில்... இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.

என்னடா இவன் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டு,
இப்படி அநியாயத்துக்கு அழுதுத் தொலைக்கிறானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

இல்லை!

நான் என்ன தெய்வப் பிறவியா?

எதற்கும் அசைய மாட்டேன் என்று சொல்வதற்கு.

"சாத்வீகனன்றோ நான்?,
சொல்லடி என் சக்தி...?"
என்றுக் கதறத் தோன்றுகிறது.

எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.

இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.

ஆம். இது நிஜம்.

என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்...
என் தலையில்(மூளையில்)...,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

*****************************************

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

அந்தோணிக்கு உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் அளித்தால், பணம் அனுப்புவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அனுப்புகிறேன். எனது மின்னஞ்சல்: balaji_ammu@yahoo.com
முந்தைய உதவி முயற்சிகளில் பங்கேற்ற நண்பர்கள் வசம், எனது வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.

அந்தோணிக்கு நேரடியாக உதவ விரும்பினால், அவரது வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்களும், தேவையான விவரங்களும் உள்ளன. சில விவரங்களை கீழ்க் காணவும்.

Address:
S. Anthony Muthu,
C/o J. Dharmaraj, 5/96 Cheran street, K.K.Nagar, Pammadhukullam, Redhills, Chennai-52, Tamilnadu, India
Pin Code No: 600052

Tele: 26323185,
Mobile No: 09444496600,
E.mails:
anthonymuthu1983@yahoo.com
anthonymuthu1983@gmail.com

J. Dharmaraj
Indian bank/ Chennai/ Redhills Branch.
Old Account No.32318
New Account No. 46929660-7


இம்முயற்சிக்கு உங்களால் இயன்ற ஆதரவு தருமாறு பணிவான வேண்டுகோளுடன்

எ.அ.பாலா

Tuesday, January 15, 2008

412. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியா?

சென்ற ஆண்டு,சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி தந்தது, இவ்வாண்டு, AIAFB (All India Animal Welfare Board) மற்றும் சில மிருக வதை எதிர்ப்பு அமைப்புகளும் உச்சநீதி மன்றம் சென்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வாங்கி விட்டன. பண்டைய தமிழர் நாகரிகத்தில் "ஏறு தழுவுதல்" என்ற பெயரில் ஒருவர் அல்லது இருவர் காளையை அடக்குவது, இப்போது "ஜல்லிக்கட்டு" என்ற பெயரில் ஒரு கூட்டமே, மிரண்டு ஓடும் காளை மீது பாய்வது என்ற அளவில் இருக்கிறது. இதில் வீரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டத்திடமிருந்து எப்படியாவது தப்புவதற்கு காளைகள் அலைபாயும்போது, பலருக்கும் காயம் ஏற்படுகிறது தான் மிச்சம் !!!

ஆனால், இந்த திடீர் தடை சரியானது இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கூற முடியும்:

1. நீதிமன்றத்தில் இரண்டு பக்க கருத்துகளையும் கேட்டறிந்து, இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை,
status quo-வை நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும். அதாவது, சென்ற ஆண்டு போலவே, சில நிபந்தனைகளுடன் போட்டியை நடத்துவதற்கு ! போட்டிக்கு இரண்டு நாட்கள் முன் தடை விதித்தது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

2. ஜல்லிக்கட்டில் வதைக்கப்படுவதைக் காட்டிலும், பல சூழல்களில் மிருகங்கள் பயங்கரமான கொடுமைக்கு உள்ளாவது, ராமலிங்க அடிகளார் வழி வந்த, இந்த மிருக வதை எதிர்ப்பு ஆர்வலர்கள் அறியாத ஒன்று என்பது நம்பக்கூடியதாக இல்லை !

திரைப்படங்களில் (மிகச்சமீப காலத்து!) சண்டைக் காட்சிகளில், கோழிகளும், புறாக்களும் சண்டையிடுபவர்கள் மீது வீசப்படுகின்றன. வில்லன் கூட்டத்து அடியாட்கள், அந்த பறவைகள் மேல் விழுவதால், பல நசுங்கி உயிரை விடுகின்றன. அது போலவே, சில காட்சிகளில், வேகமாக ஓடி வரும் குதிரைகளை ( அவற்றின் முன்னங்கால்கள் முன் திடீரென்று கயிற்றை உயர்த்துவதன் மூலம்) தடுக்கி விழ வைக்கும்போது, திரையில் பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருக்கலாம் !!! ஆனால், அந்த குதிரைக்கு பயங்கரமாக அடி படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதன் கழுத்து எழும்பே சில சமயங்களில் முறிந்து விடும். அச்சமயம், அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை :(

மிருகவதை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், ரேக்ளா பந்தயத்தை அனுமதிப்பதிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. காளைகளை சாட்டையால் அடித்து விரட்டி அவைகளை அதிவேகமாக ஓட வைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே! அது போலவே, (சகமனிதர்கள் மேல் வெளிப்படுத்துவதைக் காட்டிலும்!) மிருகங்களின் மேல் பரிவு காட்டும், மிருகவதையை எண்ணி தார்மீகக் கோபம் கொள்ளும், செலக்டிவ் அம்னீஸியா உடைய இந்த அறிவுஜீவிகள், குதிரைப் பந்தயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்! ஏனெனில், அவை பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட (ஆனால், சாதாரண மக்களும் பணத்தை இழக்கும்!) மேட்டுக்குடி 'வீர' விளையாட்டு என்பதால்!

அப்பந்தயங்களிலும், குதிரைகளை சவுக்கால் அடி அடியென்று அடித்துத் தானே ஓட்டுகிறார்கள். மேலும், ஓரிரண்டு ஆண்டுகள் பந்தயங்களில் பங்கு பெற்ற குதிரைகள், அவைகள் பந்தயங்களுக்கு லாயக்கில்லை என்ற நிலையில், சுட்டுக் கொல்லப்படுகின்றன என்றும் கேள்விப்பட்டதுண்டு :(

கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஏதோ ஒரு சர்க்கஸில் மிருகங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறிக் கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் ரசிக்கும் மிருகங்களின் சாகச நிகழ்ச்சிகளையே சர்க்கஸிலிருந்து நீக்க வேண்டிய சூழலை உருவாக்கிய பெருமையும் இந்த 'ஆர்வக் கோளாறர்களையே'(!) சாரும்! பள்ளிப்பருவத்தில் தீவுத்திடலில் நடைபெற்ற ஜெமினி சர்க்கஸை எண்ணிப் பார்க்கிறேன், நாஸ்டால்ஜியா ...

வெள்ளெலிகள், முயல்கள், குரங்குகள், குதிரைகள் ஆகியவை மேல் நடத்தப்படும் (வலி மிக்க) அறிவியல் பரிசோதனைகள் கூட, மிருகவதை என்ற வரையறைக்குள் தான் வருகின்றன என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது. இறைச்சிக்காக, விலங்குகளைக் கொல்வதை, தனி மனிதனின் உணவு விருப்பம் சார்ந்த உரிமை என்ற அளவில் நோக்கும்போது அது தவறில்லை என்றாலும், அவைகளைக் கொல்வதில் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் முறைகள் சற்றுக் கொடூரமானவையே!

வலியற்ற மரணம் என்பது, அளவில் சிறியதாக உள்ள கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால், இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள் மிகுந்த வலியை அனுபவித்த பின்னரே உயிரை விடுகின்றன என்பது தான் உண்மை! நான் வாசித்தறிந்த, அவற்றின் சாவின் கொடூரத்தை இங்கு விவரிக்க விரும்பவில்லை :(

பல கோழிகளின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு, தலைகீழாக அக்கோழிகள் சைக்கிள் கைப்பிடியில் தொங்க விடப்பட்டு, கசாப்புக் கடைக்கு எடுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சியை, பல சமயங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே, மூச்சு விடக்கூட முடியாத வகையில், 10 மாடுகள் பயணிக்கக்கூடிய வண்டியில் 25 மாடுகள் ஏற்றப்பட்டு, பலமணி நேர (மரண வேதனை) தரும் கொடும்பயணத்தின் முடிவில், வெட்டப்படும் இடத்தை மாடுகள் அடைகின்றன! எப்படியும் சிறிது நேரத்தில் சாகப் போகிற ஜென்மங்களுக்கு சௌகரியம் எதற்கு என்ற எண்ணம் தானே இதற்குக் காரணம் ????

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, ஜல்லிக்கட்டு ஒன்றும் மிருகங்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாக எனக்குத் தோன்றவில்லை! மேலும், ஸ்பெயின் போன்ற நாடுகளில், போட்டியில் அடக்கப்பட்ட காளைகளை, மிகக் கூர்மையான கத்தியை அவற்றில் உடம்பில் பாய்ச்சியே, துளியும் இரக்கமற்ற வகையில் கொன்று விடுவதைப் பார்க்கும்போது, நம்மூர் ஜல்லிக்கட்டை கொடுமையான விளையாட்டாக எண்ணிப் பார்க்க முடியவில்லை!

என்ன, போட்டிகளில் பங்கு பெறும் காளைகளுக்கு சாராயம் கொடுத்து, அவற்றின் ஆசன துவாரத்தில் மிளகாய்ப் பொடி ஏற்றி கொடுமைப் படுத்தாமல், காளைகளை அடக்க முன் வருபவர்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

தீபாவளியின் போது கூடத் தான், வெடிச் சத்தத்தால், மிருகங்களும் பறவைகளும் (குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும்) பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறைந்தபட்சம், சத்தம் ஏற்படுத்தும் எல்லா வகை (ஊசிப்பட்டாசு முதல் ஹைட்ரஜன் பாம் வரை) பட்டாசுகளும் தடை செய்யப்படுவதை முன் வைத்து இந்த மிருகவதை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் !!! அதென்ன, தீபாவளிக்கு மட்டும், குறிப்பிட்ட டெசிபல்களுக்குள் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க அனுமதித்து, நிபந்தனைக்கு உட்பட்ட ஸ்பெஷல் status !!! (அந்த சட்டத்தை யாரும் மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்!) அது போலவே, ஜல்லிக்கட்டையும் சிலபல நிபந்தனைகளோடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தான் நான் கூற வருவது.

அது போலவே, இந்த ஆர்வலர்கள், கோயிலில் கோழிகள்/ஆடுகள் (நேர்ந்து கொண்டதற்காக) பலியிடப்படுவதையும், பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகள்/ஒட்டகங்கள் வெட்டப்படுவதையும் எதிர்த்து விடாமல் போராடலாம். இது போல, அவர்கள் போராடுவதற்கு (ஜல்லிக்கட்டு தவிர்த்து!) எவ்வளவோ விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன !!!

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails